மணிமேகலை















பெயரில் 1940 இல் வெளிவந்த திரைப்படம் பற்றிய தகவலுக்கு மணிமேகலை கட்டுரையைப் பார்க்க. மணிமேகலை ஐம்பெரும் தமிழ் காப்பியங்களுள் ஒன்று. இக்காப்பியத்தை இயற்றியவர் சீத்தலைச் சாத்தனார். மணிமேகலையின் கதைக்களன், கதை மாந்தர் , கதை நடக்கும் காலம் ஆகியவை சிலப்பதிகாரத்தை ஒத்து இருப்பதால் மணிமேகலையும் சிலப்பதிகாரமும் இரட்டைக் காப்பியங்கள் என்று அழைக்கப்படுகின்றன.

[தொகு] கதை

சிலப்பதிகாரத்திற்கு அடுத்ததாக இலக்கிய அழகில் பெருமைவாய்ந்த மணிமேகலை, ஐம்பெரும் தமிழ் காப்பியங்களுள் ஒன்றாகும். இக்காபியத்தின் தலைவி, மணிமேகலை, சிலப்பதிகாரத்தின் கோவலன் மற்றும் மாதவி என்பவர்களின் மகளாவாள். கோவலனின் துயர மரணத்திற்குப் பிறகு மாதவி தன் மகளை ஒரு புத்தத் துறவியாக வளர்த்தாள். ஒரு சமயத்தில் மணிமேகலையும் அவளுடைய தோழியும் பூப்பறிக்கச் சென்றிருந்தபோது, உதயகுமரன் என்ற சோழ மன்னன் மணிமேகலையின் மீது காதல் மயக்கம் கொண்டான். கடலின் கடவுளான மணிமேகலா, மணிமேகலையின் உலக இன்பங்கள் துறந்த வாழ்க்கையைப் பாதுகாக்க, அவளை தான் அறியாமலே மணிபல்லவம் என்ற தீவில் கொண்டு விட்டாள். அத்தீவில் மணிமேகலை ஒரு புத்த பீடிகை மூலம் தனது முன்பிறப்பைப் பற்றி அறிந்தாள். அதன் பிறகு, கடலின் கடவுள் மணிமேகலா, மணிமேகலையிடம் அவள் ஏன் மணிபல்லவத்திற்கு அழைத்து வரப்பட்டாள் என்பதைக் கூறி, மூன்று அதிசய மந்திரங்களையும் கற்றுக்கொடுத்தாள். அத்தீவில் மணிமேகலை 'அமுத சுரபி' என்ற உணவுக் கிண்ணத்தைக் கண்டெடுத்து, அதிலிருந்து அளவற்ற உணவை புகாரிலுள்ள ஏழைஎளியோருக்கு வழங்கினாள். இதையெல்லாம் கண்ட உதயகுமரன், மணிமேகலை தன்னை மணக்க வேண்டும் என்று அவளை வற்புறுத்தினான். ஆனால் மணிமேகலை தான் கற்ற வித்தையைப் பயன்படுத்தி காயசண்டிகையாக உருமாற்றிக் கொண்டாள். உண்மையான காயசண்டிகையின் கணவன் சந்தர்ப்ப சூழ்நிலைகளால் உதயகுமரனைக் கொலை செய்துவிட்டான். இதற்காகக் காயசண்டிகையின் உருவத்தில் இருக்கும் மணிமேகலை கைது செய்யப்படுகிறாள். ஆனால் தனது தாயாரின் உதவியோடு விடுவிக்கப்படுகிறாள். பிறகு அவள் வஞ்சி நகரத்திற்குச் சென்று தந்து ஞான ஆசிரியரான கண்ணகியிடம் உரையாடி அறிவுரை பெற்றாள். அத்துடன் அனைத்து மதங்களின் நிறைகுறைகளை வல்லுனர்களிடமிருந்து அறிந்தாள். அதன்பிறகு காஞ்சி நகரத்திற்குச் சென்று தனது ஆசானான அறவண அடிகளிடம் படிப்பினை பெற்று ஒரு முழுமையான புத்தத் துறவியாகி, தவத்தில் ஆழ்ந்தாள்.

[தொகு] கதாப்பாத்திரங்கள்

மணிமேகலை - கோவலன் மாதவி தம்பதியின் மகள். இரத்தத்திலேயே ஊறிய துணிச்சல், பண்புகள் அதிகம் பெற்றவள். துறவியாகவேண்டும் என்று கூறிய புத்த மதப் பிக்குணி, ஒரு புறமும், தன்னை மோகத்தினால் பின்தொடர்ந்த சோழ மன்னன் மறுபுறமும் இருந்தும், மணிமேகலை அனைத்துத் தடைக்கற்களையும் துணிச்சலுடன் உடைத்தெறிந்தாள். பிறகு தன் விருப்பப்படியே புத்தத் துறவியாகி மக்களின் பசியைப் போக்குவதையே தன் கடமையாகக் கொண்டு வாழ்ந்த மணிமேகலை, அவள் மறைவிற்கு பின் தெய்வமாகப் போற்றப்பட்டாள். கோவலன் இரத்தத்தில் பசுமரத்தாணி போல் பதிந்திருந்த வீரம் மணிமேகலையிடம் இருந்ததால்தான் இது சாத்தியமானது. மாதவியைப் போல் மணிமேகலையிடம் அளவற்ற பண்புகள் இருந்தமையால்தான், தனது தாயார், ஆசான் மற்றும் ஞானபிதாவின் பேச்சை மதித்து நடக்கிறாள். இக்காப்பியமே மணிமேகலை பெரியவர்களின் பேச்சைக் கேட்டு நடப்பதை மூலமாகக் கொண்டு அமைந்துள்ளது.
உதயகுமரன் - சோழ மன்னன், மனிமேகலையின் மீது முட்டாள் தனமான மோகம் கொண்டவன். நினைத்ததை அடையவேண்டும் என்ற குணம் படைத்தவன். ஆசை இருக்கலாம் ஆனால் வெறித்தனமான ஆசை இருந்தால் அழிவு நிச்சயம் என்பதை உதயகுமரன் கதாப்பாத்திரம் காட்டியுள்ளது. மணிமேகலையின் மேல் காதல்கொண்ட உதயகுமரன் அவளது துறவியாக வேண்டும் என்ற ஆசையை அறிந்தும் கூட அவளைப் பின்தொடர்ந்தான். ஆனால் சந்தர்ப்ப சூழ்நிலைகளால், கஞ்சணன் என்பவன் உதயகுமாரனைக் கொலை செய்துவிட்டான்.
சுதமதி - மணிமேகலையின் நம்பகமான தோழி. மணிமேகலையை மணிபல்லவத்தில் விட்டு, அவளை ஆன்மீகப் பாதையில் செலுத்தியதை மேகலையின் தாயாரிடம் கூடக் கூறாமல், சுதமதியின் கனவிலேயே முதலில் தோன்றி நடந்ததை கூறினாள், கடலின் கடவுள் மணிமேகலா. இது சுதமதியின் மேல் மணிமேகலா வைத்திருக்கும் நம்பிக்கையை காட்டுகிறது. இக்காப்பியத்திலேயே மணிமேகலையின் ஒரே தோழி சுதமதிதான். அக்காலக்கட்டங்களில் நண்பர்களுக்கெல்லாம் ஒரு இலக்கணமாக அமைந்தவள் சுதமதி. அவளிடமிருந்து நாம் கற்றுக்கொள்ளவேண்டியவை பல உண்டு


மணிமேகலை ஐம்பெரும் காப்பியங்களுள் ஒன்று. மணிமேகலையின் கதைக்களன், கதை மாந்தர், கதை நடக்கும் காலம் ஆகியவை சிலப்பதிகாரத்தை ஒத்து இருப்பதால் மணிமேகலையும் சிலப்பதிகாரமும் இரட்டைக் காப்பியங்கள் என்று அழைக்கப்படுகின்றன. இக்காப்பியத்தின் நாயகி மணிமேகலை, சிலப்பதிகாரத்தில் வரும் மாதவியின் மகளாவாள். கோவலன் மற்றும் கண்ணகியின் சோக மறைவிற்கு பிறகு, மாதவி பொது வாழ்விலிருந்தும் கலைப் பணியிலிருந்தும் தன்னை விடுவித்துக் கொண்டாள். தான் கடந்த காலத்தில் வாழ்ந்த முறையையும் நினைவுகளையும் மாற்ற நினைத்த மாதவி, அவற்றின் சுவடுகளும் உலக சுகங்களும் இன்றி மணிமேகலையை வளர்க்க எண்ணி புத்த சமய மடம் ஒன்றில் அவளைச் சேர்த்து வளர்த்தாள்.

அவள் வாழ்ந்து வந்த நாட்டு இளவரசன் மணிமேகலையின் மேல் காதல் கொள்ளவே, அவனிடமிருந்து விடுபட்டு மணிபல்லவத் தீவுக்குச் சென்று புத்த சமயத் துறவியானாள். அங்கு அவளுக்கு பசிப்பிணி போக்கும் 'அட்சய பாத்திரம்' கிடைத்தது. அன்று முதல் மக்களின் பசியைப் போக்குவதையே தன் கடமையாகக் கொண்டு வாழ்ந்த மணிமேகலை, அவள் மறைவிற்கு பின் தெய்வமாகப் போற்றப்பட்டாள்.



நூல்


இளங் கதிர் ஞாயிறு எள்ளும் தோற்றத்து
விளங்கு ஒளி மேனி விரி சடையாட்டி
பொன் திகழ் நெடு வரை உச்சித் தோன்றி
தென் திசைப் பெயர்ந்த இத் தீவத் தெய்வதம்
சாகைச் சம்பு தன் கீழ் நின்று
மா நில மடந்தைக்கு வரும் துயர் கேட்டு
வெந் திறல் அரக்கர்க்கு வெம் பகை நோற்ற
சம்பு என்பாள் சம்பாபதியினள்
செங்கதிர்ச் செல்வன் திருக் குலம் விளக்கும்
கஞ்ச வேட்கையின் காந்த மன் வேண்ட
00-010

அமர முனிவன் அகத்தியன் தனாது
கரகம் கவிழ்த்த காவிரிப் பாவை
செங் குணக்கு ஒழுகி அச் சம்பாபதி அயல்
பொங்கு நீர்ப் பரப்பொடு பொருந்தித் தோன்ற
ஆங்கு இனிது இருந்த அருந் தவ முதியோள்
ஓங்கு நீர்ப் பாவையை உவந்து எதிர்கொண்டு ஆங்கு
ஆணு விசும்பின் ஆகாயகங்கை
வேணவாத் தீர்த்த விளக்கே வா என
பின்னிலை முனியாப் பெருந் தவன் கேட்டு ஈங்கு
'அன்னை கேள் இவ் அருந் தவ முதியோள்
00-020

நின்னால் வணங்கும் தகைமையள் வணங்கு' என
பாடல்சால் சிறப்பின் பரதத்து ஓங்கிய
கோடாச் செங்கோல் சோழர் தம் குலக்கொடி
கோள் நிலை திரிந்து கோடை நீடினும்
தான் நிலை திரியாத் தண் தமிழ்ப் பாவை
தொழுதனள் நிற்ப அத் தொல் மூதாட்டி
கழுமிய உவகையின் கவான் கொண்டிருந்து
தெய்வக் கருவும் திசைமுகக் கருவும்
செம்மலர் முதியோன் செய்த அந் நாள்
என் பெயர்ப் படுத்த இவ் விரும் பெயர் மூதூர்
00-030

நின் பெயர்ப் படுத்தேன் நீ வாழிய! என
இரு பால் பெயரிய உரு கெழு மூதூர்
ஒரு நூறு வேள்வி உரவோன் தனக்குப்
பெரு விழா அறைந்ததும் 'பெருகியது அலர்' என
சிதைந்த நெஞ்சின் சித்திராபதி தான்
வயந்த மாலையான் மாதவிக்கு உரைத்ததும்
மணிமேகலை தான் மா மலர் கொய்ய
அணி மலர்ப் பூம்பொழில் அகவயின் சென்றதும்
ஆங்கு அப் பூம்பொழில் அரசு இளங் குமரனைப்
பாங்கில் கண்டு அவள் பளிக்கறை புக்கதும்
00-040

பளிக்கறை புக்க பாவையைக் கண்டு அவன்
துளக்குறு நெஞ்சில் துயரொடும் போய பின்
மணிமேகலா தெய்வம் வந்து தோன்றியதும்
மணிமேகலையை மணிபல்லவத்து உய்த்ததும்
உவவன மருங்கின் அவ் உரைசால் தெய்வதம்
சுதமதி தன்னைத் துயில் எடுப்பியதூஉம்
ஆங்கு அத் தீவகத்து ஆய் இழை நல்லாள்
தான் துயில் உணர்ந்து தனித் துயர் உழந்ததும்
உழந்தோள் ஆங்கண் ஓர் ஒளி மணிப் பீடிகைப்
பழம் பிறப்பு எல்லாம் பான்மையின் உணர்ந்ததும்
00-050

உணர்ந்தோள் முன்னர் உயர் தெய்வம் தோன்றி
'மனம் கவல் ஒழிக!' என மந்திரம் கொடுத்ததும்
தீபதிலகை செவ்வனம் தோன்றி
மா பெரும் பாத்திரம் மடக்கொடிக்கு அளித்ததும்
பாத்திரம் பெற்ற பைந்தொடி தாயரொடு
யாப்புறு மா தவத்து அறவணர்த் தொழுததும்
அறவண அடிகள் ஆபுத்திரன் திறம்
நறு மலர்க் கோதைக்கு நன்கனம் உரைத்ததும்
அங்கைப் பாத்திரம் ஆபுத்திரன்பால்
சிந்தாதேவி கொடுத்த வண்ணமும்
00-060

மற்று அப் பாத்திரம் மடக்கொடி ஏந்தி
பிச்சைக்கு அவ் ஊர்ப் பெருந் தெரு அடைந்ததும்
பிச்சை ஏற்ற பெய் வளை கடிஞையில்
பத்தினிப் பெண்டிர் பாத்தூண் ஈத்ததும்
காரிகை நல்லாள் காயசண்டிகை வயிற்று
ஆனைத்தீக் கெடுத்து அம்பலம் அடைந்ததும்
அம்பலம் அடைந்தனள் ஆய் இழை என்றே
கொங்கு அலர் நறுந் தார்க் கோமகன் சென்றதும்
அம்பலம் அடைந்த அரசு இளங் குமரன்முன்
வஞ்ச விஞ்சையன் மகள் வடிவு ஆகி
00-070

> மறம் செய் வேலோன் வான் சிறைக்கோட்டம்
அறம் செய் கோட்டம் ஆக்கிய வண்ணமும்
காயசண்டிகை என விஞ்சைக் காஞ்சனன்
ஆய் இழை தன்னை அகலாது அணுகலும்
வஞ்ச விஞ்சையன் மன்னவன் சிறுவனை
மைந்து உடை வாளின் தப்பிய வண்ணமும்
ஐ அரி உண் கண் அவன் துயர் பொறாஅள்
தெய்வக் கிளவியின் தௌிந்த வண்ணமும்
அறை கழல் வேந்தன் 'ஆய் இழை தன்னைச்
சிறை செய்க' என்றதும் சிறைவீடு செய்ததும்
00-080

நறு மலர்க் கோதைக்கு நல் அறம் உரைத்து ஆங்கு
ஆய் வளை ஆபுத்திரன் நாடு அடைந்ததும்
ஆங்கு அவன்தன்னோடு அணி இழை போகி
ஓங்கிய மணிபல்லவத்திடை உற்றதும்
உற்றவள் ஆங்கு ஓர் உயர் தவன் வடிவு ஆய்
பொன் கொடி வஞ்சியில் பொருந்திய வண்ணமும்
'நவை அறு நன்பொருள் உரைமினோ' என
சமயக் கணக்கர் தம் திறம் கேட்டதும்
ஆங்கு அத் தாயரோடு அறவணர்த் தேர்ந்து
பூங்கொடி கச்சி மா நகர் புக்கதும்
00-090

புக்கு அவள் கொண்ட பொய் உருக் களைந்து
மற்று அவர் பாதம் வணங்கிய வண்ணமும்
தவத் திறம் பூண்டு தருமம் கேட்டு
'பவத் திறம் அறுக' என பாவை நோற்றதும்
இளங்கோ வேந்தன் அருளிக் கேட்ப
வளம் கெழு கூல வாணிகன் சாத்தன்
மா வண் தமிழ்த் திறம் மணிமேகலை துறவு
ஆறு ஐம் பாட்டினுள் அறிய வைத்தனன் என்
00-098


1. விழாவறை காதை

உலகம் திரியா ஓங்கு உயர் விழுச் சீர்ப்
பலர் புகழ் மூதூர்ப் பண்பு மேம்படீஇய
ஓங்கு உயர் மலயத்து அருந் தவன் உரைப்ப
தூங்கு எயில் எறிந்த தொடித் தோள் செம்பியன்
விண்ணவர் தலைவனை வணங்கி முன் நின்று
'மண்ணகத்து என்தன் வான் பதி தன்னுள்
மேலோர் விழைய விழாக் கோள் எடுத்த
நால் ஏழ் நாளினும் நன்கு இனிது உறைக' என
அமரர் தலைவன் ஆங்கு அது நேர்ந்தது
கவராக் கேள்வியோர் கடவார் ஆகலின்
01-010

மெய்த் திறம் வழக்கு நன்பொருள் வீடு எனும்
இத் திறம் தம் தம் இயல்பினின் காட்டும்
சமயக் கணக்கரும் தம் துறை போகிய
அமயக் கணக்கரும் அகலார் ஆகி
கரந்து உரு எய்திய கடவுளாளரும்
பரந்து ஒருங்கு ஈண்டிய பாடை மாக்களும்
ஐம் பெருங்குழுவும் எண் பேர் ஆயமும்
வந்து ஒருங்கு குழீஇ 'வான்பதி தன்னுள்
கொடித் தேர்த் தானைக் கொற்றவன் துயரம்
விடுத்த பூதம் விழாக்கோள் மறப்பின்
01-020

மடித்த செவ் வாய் வல் எயிறு இலங்க
இடிக் குரல் முழக்கத்து இடும்பை செய்திடும்
தொடுத்த பாசத்து தொல் பதி நரகரைப்
புடைத்து உணும் பூதமும் பொருந்தாதாயிடும்
மா இரு ஞாலத்து அரசு தலையீண்டும்
ஆயிரம்கண்ணோன் விழாக் கால்கொள்க' என
வச்சிரக் கோட்டத்து மணம் கெழு முரசம்
கச்சை யானைப் பிடர்த்தலை ஏற்றி
ஏற்று உரி போர்த்த இடி உறு முழக்கின்
கூற்றுக்கண் விளிக்கும் குருதி வேட்கை
01-030

முரசு கடிப்பு இகூஉம் முதுகுடிப் பிறந்தோன்
'திரு விழை மூதூர் வாழ்க!' என்று ஏத்தி
'வானம் மும் மாரி பொழிக! மன்னவன்
கோள் நிலை திரியாக் கோலோன் ஆகுக!
தீவகச் சாந்தி செய்தரு நல் நாள்
ஆயிரம்கண்ணோன் தன்னோடு ஆங்கு உள
நால் வேறு தேவரும் நலத்தகு சிறப்பில்
பால் வேறு தேவரும் இப் பதிப் படர்ந்து
மன்னன் கரிகால்வளவன் நீங்கிய நாள்
இந் நகர் போல்வதோர் இயல்பினது ஆகிப்
01-040

பொன்நகர் வறிதாப் போதுவர் என்பது
தொல் நிலை உணர்ந்தோர் துணிபொருள் ஆதலின்
தோரண வீதியும் தோம் அறு கோட்டியும்
பூரண கும்பமும் பொலம் பாலிகைகளும்
பாவை விளக்கும் பல உடன் பரப்புமின்
காய்க் குலைக் கமுகும் வாழையும் வஞ்சியும்
பூக் கொடி வல்லியும் கரும்பும் நடுமின்
பத்தி வேதிகைப் பசும் பொன் தூணத்து
முத்துத் தாமம் முறையொடு நாற்றுமின்
விழவு மலி மூதூர் வீதியும் மன்றமும்
01-050

பழ மணல் மாற்றுமின் புது மணல் பரப்புமின்
கதலிகைக் கொடியும் காழ் ஊன்று விலோதமும்
மதலை மாடமும் வாயிலும் சேர்த்துமின்
நுதல் விழி நாட்டத்து இறையோன் முதலா
பதி வாழ் சதுக்கத்துத் தெய்வம் ஈறு ஆக
வேறுவேறு சிறப்பின் வேறுவேறு செய்வினை
ஆறு அறி மரபின் அறிந்தோர் செய்யுமின்
தண் மணல் பந்தரும் தாழ்தரு பொதியிலும்
புண்ணிய நல்லுரை அறிவீர்! பொருந்துமின்
ஒட்டிய சமயத்து உறு பொருள் வாதிகள்
01-060

பட்டி மண்டபத்து பாங்கு அறிந்து ஏறுமின்
பற்றாமாக்கள் தம்முடன் ஆயினும்
செற்றமும் கலாமும் செய்யாது அகலுமின்
வெண் மணல் குன்றமும் விரி பூஞ் சோலையும்
தண் மணல் துருத்தியும் தாழ் பூந் துறைகளும்
தேவரும் மக்களும் ஒத்து உடன் திரிதரும்
நால் ஏழ் நாளினும் நன்கு அறிந்தீர் என
ஒளிறு வாள் மறவரும் தேரும் மாவும்
களிறும் சூழ்தர கண் முரசு இயம்பி
'பசியும் பிணியும் பகையும் நீங்கி
வசியும் வளனும் சுரக்க!' என வாழ்த்தி
அணி விழா அறைந்தனன் அகநகர் மருங்கு என்
01-072

2. ஊரலர் உரைத்த காதை

நாவல் ஓங்கிய மா பெருந் தீவினுள்
காவல் தெய்வதம் தேவர்கோற்கு எடுத்த
தீவகச் சாந்தி செய்தரு நல் நாள்
மணிமேகலையொடு மாதவி வாராத்
தணியாத் துன்பம் தலைத்தலை மேல் வர
சித்திராபதி தான் செல்லல் உற்று இரங்கி
தத்து அரி நெடுங் கண் தன் மகள் தோழி
வயந்தமாலையை 'வருக' எனக் கூஉய்
'பயம் கெழு மா நகர் அலர் எடுத்து உரை' என
வயந்த மாலையும் மாதவி துறவிக்கு
02-010

அயர்ந்து, மெய் வாடிய அழிவினள் ஆதலின்
மணிமேகலையொடு மாதவி இருந்த
அணி மலர் மண்டபத்து அகவயின் செலீஇ
ஆடிய சாயல் ஆய் இழை மடந்தை
வாடிய மேனி கண்டு உளம் வருந்தி
'பொன் நேர் அனையாய்! புகுந்தது கேளாய்!
உன்னோடு இவ் ஊர் உற்றது ஒன்று உண்டுகொல்?
"வேத்தியல் பொதுவியல் என்று இரு திறத்துக்
கூத்தும் பாட்டும் தூக்கும் துணிவும்
பண் யாழ்க் கரணமும் பாடைப் பாடலும்
02-020

தண்ணுமைக் கருவியும் தாழ் தீம் குழலும்
கந்துகக் கருத்தும் மடைநூல் செய்தியும்
சுந்தரச் சுண்ணமும் தூ நீர் ஆடலும்
பாயல் பள்ளியும் பருவத்து ஒழுக்கமும்
காயக் கரணமும் கண்ணியது உணர்தலும்
கட்டுரை வகையும் கரந்து உறை கணக்கும்
வட்டிகைச் செய்தியும் மலர் ஆய்ந்து தொடுத்தலும்
கோலம் கோடலும் கோவையின் கோப்பும்
காலக் கணிதமும் கலைகளின் துணிவும்
நாடக மகளிர்க்கு நன்கனம் வகுத்த
02-030

ஓவியச் செந் நூல் உரை நூல் கிடக்கையும்
கற்று துறைபோகிய பொன் தொடி நங்கை
நல் தவம் புரிந்தது நாண் உடைத்து" என்றே
அலகு இல் மூதூர் ஆன்றவர் அல்லது
பலர் தொகுபு உரைக்கும் பண்பு இல் வாய்மொழி
'நயம்பாடு இல்லை நாண் உடைத்து' என்ற
வயந்தமாலைக்கு மாதவி உரைக்கும்
'காதலன் உற்ற கடுந் துயர் கேட்டு
போதல்செய்யா உயிரொடு நின்றே
பொன் கொடி மூதூர்ப் பொருளுரை இழந்து
02-040

நல் தொடி நங்காய்! நாணுத் துறந்தேன்
காதலர் இறப்பின் கனை எரி பொத்தி
ஊது உலைக் குருகின் உயிர்த்து அகத்து அடங்காது
இன் உயிர் ஈவர் ஈயார் ஆயின்
நல் நீர்ப் பொய்கையின் நளி எரி புகுவர்
நளி எரி புகாஅர் ஆயின் அன்பரோடு
உடன் உறை வாழ்க்கைக்கு நோற்று உடம்பு அடுவர்
பத்தினிப் பெண்டிர் பரப்புநீர் ஞாலத்து
அத் திறத்தாளும் அல்லள் எம் ஆய் இழை
கணவற்கு உற்ற கடுந் துயர் பொறா அள்
02-050

மணம் மலி கூந்தல் சிறுபுறம் புதைப்ப
கண்ணீர் ஆடிய கதிர் இள வன முலை
திண்ணிதின் திருகி தீ அழல் பொத்தி
காவலன் பேர் ஊர் கனை எரி ஊட்டிய
மா பெரும் பத்தினி மகள் மணிமேகலை
அருந் தவப் படுத்தல் அல்லது யாவதும்
திருந்தாச் செய்கைத் தீத் தொழில் படாஅள்
ஆங்கனம் அன்றியும் ஆய் இழை கேளாய்
ஈங்கு இம் மாதவர் உறைவிடம் புகுந்தேன்
மற வணம் நீத்த மாசு அறு கேள்வி
02-060

அறவண அடிகள் அடிமிசை வீழ்ந்து
மா பெருந் துன்பம் கொண்டு உளம் மயங்கி
காதலன் உற்ற கடுந் துயர் கூறப்
"பிறந்தோர் உறுவது பெருகிய துன்பம்
பிறவார் உறுவது பெரும் பேர் இன்பம்
பற்றின் வருவது முன்னது பின்னது
அற்றோர் உறுவது அறிக!" என்று அருளி
ஐவகைச் சீலத்து அமைதியும் காட்டி
"உய் வகை இவை கொள்" என்று உரவோன் அருளினன்
மைத் தடங் கண்ணார் தமக்கும் எற் பயந்த
02-070

சித்திராபதிக்கும் செப்பு நீ என
ஆங்கு அவள் உரை கேட்டு அரும் பெறல் மா மணி
ஓங்கு திரைப் பெருங் கடல் வீழ்த்தோர் போன்று
மையல் நெஞ்சமொடு வயந்த மாலையும்
கையற்றுப் பெயர்ந்தனள் காரிகை திறத்து என்
02-075

3. மலர்வனம் புக்க காதை

வயந்தமாலைக்கு மாதவி உரைத்த
உயங்கு நோய் வருத்தத்து உரைமுன் தோன்றி
மா மலர் நாற்றம் போல் மணிமேகலைக்கு
ஏது நிகழ்ச்சி எதிர்ந்துளது ஆதலின்
தந்தையும் தாயும் தாம் நனி உழந்த
வெந் துயர் இடும்பை செவிஅகம் வெதுப்ப
காதல் நெஞ்சம் கலங்கிக் காரிகை
மாதர் செங் கண் வரி வனப்பு அழித்து
புலம்பு நீர் உருட்டிப் பொதி அவிழ் நறு மலர்
இலங்கு இதழ் மாலையை இட்டு நீராட்ட
03-010

மாதவி மணிமேகலை முகம் நோக்கி
தாமரை தண் மதி சேர்ந்தது போல
காமர் செங் கையின் கண்ணீர் மாற்றி
'தூ நீர் மாலை தூத்தகை இழந்தது
நிகர் மலர் நீயே கொணர்வாய்' என்றலும்
மது மலர்க் குழலியொடு மா மலர் தொடுக்கும்
சுதமதி கேட்டு துயரொடும் கூறும்
'குரவர்க்கு உற்ற கொடுந் துயர் கேட்டு
தணியாத் துன்பம் தலைத்தலை எய்தும்
மணிமேகலை தன் மதி முகம் தன்னுள்
03-020

அணி திகழ் நீலத்து ஆய் மலர் ஒட்டிய
கடை மணி உகு நீர் கண்டனன் ஆயின்
படை இட்டு நடுங்கும் காமன் பாவையை
ஆடவர் கண்டால் அகறலும் உண்டோ?
பேடியர் அன்றோ பெற்றியின் நின்றிடின்?
ஆங்கனம் அன்றியும் அணி இழை! கேளாய்
ஈங்கு இந் நகரத்து யான் வரும் காரணம்
பாராவாரப் பல் வளம் பழுநிய
காராளர் சண்பையில் கௌசிகன் என்போன்
இருபிறப்பாளன் ஒரு மகள் உள்ளேன்
03-030

ஒரு தனி அஞ்சேன் ஒரா நெஞ்சமோடு
ஆராமத்திடை அலர் கொய்வேன் தனை
மாருதவேகன் என்பான் ஓர் விஞ்சையன்
திரு விழை மூதூர் தேவர்கோற்கு எடுத்த
பெரு விழாக் காணும் பெற்றியின் வருவோன்
தாரன் மாலையன் தமனியப் பூணினன்
பாரோர் காணாப் பலர் தொழு படிமையன்
எடுத்தனன் எற் கொண்டு எழுந்தனன் விசும்பில்
படுத்தனன் ஆங்கு அவன் பான்மையேன் ஆயினேன்
ஆங்கு அவன் ஈங்கு எனை அகன்று கண்மாறி
03-040

நீங்கினன் தன் பதி நெட்டிடை ஆயினும்
மணிப் பூங் கொம்பர் மணிமேகலை தான்
தனித்து அலர் கொய்யும் தகைமையள் அல்லள்
பல் மலர் அடுக்கிய நல் மரப் பந்தர்
இலவந்திகையின் எயில் புறம் போகின்
உலக மன்னவன் உழையோர் ஆங்கு உளர்
விண்ணவர் கோமான் விழாக் கொள் நல் நாள்
மண்ணவர் விழையார் வானவர் அல்லது
பாடு வண்டு இமிரா பல் மரம் யாவையும்
வாடா மா மலர் மாலைகள் தூக்கலின்
03-050

"கைபெய் பாசத்துப் பூதம் காக்கும்" என்று
உய்யானத்திடை உணர்ந்தோர் செல்லார்
வெங்கதிர் வெம்மையின் விரி சிறை இழந்த
சம்பாதி இருந்த சம்பாதி வனமும்
தவா நீர்க் காவிரிப் பாவை தன் தாதை
கவேரன் ஆங்கு இருந்த கவேர வனமும்
மூப்பு உடை முதுமைய தாக்கு அணங்கு உடைய
யாப்பு உடைத்தாக அறிந்தோர் எய்தார்
அருளும் அன்பும் ஆர் உயிர் ஓம்பும்
ஒரு பெரும் பூட்கையும் ஒழியா நோன்பின்
03-060

பகவனது ஆணையின் பல் மரம் பூக்கும்
உவவனம் என்பது ஒன்று உண்டு அதன் உள்ளது
விளிப்பு அறைபோகாது மெய் புறத்து இடூஉம்
பளிக்கறை மண்டபம் உண்டு அதன் உள்ளது
தூ நிற மா மணிச் சுடர் ஒளி விரிந்த
தாமரைப் பீடிகை தான் உண்டு ஆங்கு இடின்
அரும்பு அவிழ்செய்யும் அலர்ந்தன வாடா
சுரும்பு இனம் மூசா தொல் யாண்டு கழியினும்
மறந்தேன் அதன் திறம் மாதவி கேளாய்
கடம் பூண்டு ஓர் தெய்வம் கருத்திடை வைத்தோர்
03-070

ஆங்கு அவர் அடிக்கு இடின் அவர் அடி தான் உறும்
நீங்காது யாங்கணும் நினைப்பிலராய் இடின்
"ஈங்கு இதன் காரணம் என்னை?" என்றியேல்
"சிந்தை இன்றியும் செய் வினை உறும்" எனும்
வெந் திறல் நோன்பிகள் விழுமம் கொள்ளவும்
"செய் வினை, சிந்தை இன்று எனின் யாவதும்
எய்தாது" என்போர்க்கு ஏது ஆகவும்
பயம் கெழு மா மலர் இட்டுக்காட்ட
மயன் பண்டு இழைத்த மரபினது அது தான்
அவ் வனம் அல்லது அணி இழை! நின் மகள்
03-080

செவ்வனம் செல்லும் செம்மை தான் இலள்
'மணிமேகலையொடு மா மலர் கொய்ய
அணி இழை நல்லாய்! யானும் போவல்' என்று
அணிப் பூங் கொம்பர் அவளொடும் கூடி
மணித் தேர் வீதியில் சுதமதி செல்வுழீஇ
சிமிலிக் கரண்டையன் நுழை கோல் பிரம்பினன்
தவல் அருஞ் சிறப்பின் அராந்தாணத்து உளோன்
நாணமும் உடையும் நன்கணம் நீத்து
காணா உயிர்க்கும் கையற்று ஏங்கி
உண்ணா நோன்போடு உயவல் யானையின்
03-090

மண்ணா மேனியன் வருவோன் தன்னை
'வந்தீர் அடிகள்! நும் மலர் அடி தொழுதேன்
எம் தம் அடிகள்! எம் உரை கேண்மோ
அழுக்கு உடை யாக்கையில் புகுந்த நும் உயிர்
புழுக்கறைப் பட்டோர் போன்று உளம் வருந்தாது
இம்மையும் மறுமையும் இறுதி இல் இன்பமும்
தன் வயின் தரூஉம் என் தலைமகன் உரைத்தது
கொலையும் உண்டோ கொழு மடல் தெங்கின்
விளை பூந் தேறலில் மெய்த் தவத்தீரே!
உண்டு தௌிந்து இவ் யோகத்து உறு பயன்
03-100

கண்டால் எம்மையும் கையுதிர்க்கொணம் என
உண்ணா நோன்பி தன்னொடும் சூளுற்று
'உண்ம்' என இரக்கும் ஓர் களிமகன் பின்னரும்
கணவிர மாலையின் கட்டிய திரள் புயன்
குவி முகிழ் எருக்கின் கோத்த மாலையன்
சிதவல் துணியொடு சேண் ஓங்கு நெடுஞ் சினைத்
ததர் வீழ்பு ஒடித்துக் கட்டிய உடையினன்
வெண் பலி சாந்தம் மெய்ம் முழுது உரீஇப்
பண்பு இல் கிளவி பலரொடும் உரைத்து ஆங்கு
அழூஉம் விழூஉம் அரற்றும் கூஉம்
03-110

தொழூஉம் எழூஉம் சுழலலும் சுழலும்
ஓடலும் ஓடும் ஒரு சிறை ஒதுங்கி
நீடலும் நீடும் நிழலொடு மறலும்
மையல் உற்ற மகன் பின் வருந்தி
கையறு துன்பம் கண்டு நிற்குநரும்
சுரியல் தாடி மருள் படு பூங் குழல்
பவளச் செவ் வாய் தவள வாள் நகை
ஒள் அரி நெடுங் கண் வெள்ளி வெண் தோட்டு
கருங் கொடிப் புருவத்து மருங்கு வளை பிறை நுதல்
காந்தள் அம் செங் கை ஏந்து இள வன முலை
03-120

அகன்ற அல்குல் அம் நுண் மருங்குல்
இகந்த வட்டுடை எழுது வரிக்கோலத்து
வாணன் பேர் ஊர் மறுகிடைத் தோன்றி
நீள் நிலம் அளந்தோன் மகன் முன் ஆடிய
பேடிக் கோலத்துப் பேடு காண்குநரும்
வம்ப மாக்கள் கம்பலை மூதூர்
சுடுமண் ஓங்கிய நெடு நிலை மனைதொறும்
மை அறு படிவத்து வானவர் முதலா
எவ் வகை உயிர்களும் உவமம் காட்டி
வெண் சுதை விளக்கத்து வித்தகர் இயற்றிய
03-130

கண் கவர் ஓவியம் கண்டு நிற்குநரும்
விழவு ஆற்றுப் படுத்த கழி பெரு வீதியில்
பொன் நாண் கோத்த நன் மணிக் கோவை
ஐயவி அப்பிய நெய் அணி முச்சி
மயிர்ப் புறம் சுற்றிய கயிற்கடை முக் காழ்
பொலம் பிறைச் சென்னி நலம் பெறத் தாழ
செவ் வாய்க் குதலை மெய் பெறா மழலை
சிந்துபு சில் நீர் ஐம்படை நனைப்ப
அற்றம் காவாச் சுற்று உடைப் பூந் துகில்
தொடுத்த மணிக் கோவை உடுப்பொடு துயல்வர
03-140

தளர் நடை தாங்காக் கிளர் பூண் புதல்வரை
பொலந் தேர் மீமிசைப் புகர் முக வேழத்து
இலங்கு தொடி நல்லார் சிலர் நின்று ஏற்றி
'ஆல் அமர் செல்வன் மகன் விழாக் கால்கோள்
காண்மினோ' என கண்டு நிற்குநரும்
விராடன் பேர் ஊர் விசயன் ஆம் பேடியைக்
காணிய சூழ்ந்த கம்பலை மாக்களின்
மணிமேகலை தனை வந்து புறம் சுற்றி
'அணி அமை தோற்றத்து அருந் தவப் படுத்திய
தாயோ கொடியள் தகவு இலள் ஈங்கு இவள்
03-150

மா மலர் கொய்ய மலர்வனம் தான் புகின்
நல் இள அன்னம் நாணாது ஆங்கு உள
வல்லுநகொல்லோ மடந்தை தன் நடை?
மா மயில் ஆங்கு உள வந்து முன் நிற்பன
சாயல் கற்பனகொலோ தையல் தன்னுடன்?
பைங் கிளி தாம் உள பாவை தன் கிளவிக்கு
எஞ்சலகொல்லோ? இசையுந அல்ல'
என்று இவை சொல்லி யாவரும் இனைந்து உக
செந் தளிர்ச் சேவடி நிலம் வடு உறாமல்
குரவமும் மரவமும் குருந்தும் கொன்றையும்
03-160

திலகமும் வகுளமும் செங் கால் வெட்சியும்
நரந்தமும் நாகமும் பரந்து அலர் புன்னையும்
பிடவமும் தளவமும் முட முள் தாழையும்
குடசமும் வெதிரமும் கொழுங் கால் அசோகமும்
செருந்தியும் வேங்கையும் பெருஞ் சண்பகமும்
எரி மலர் இலவமும் விரி மலர் பரப்பி
வித்தகர் இயற்றிய விளங்கிய கைவினைச்
சித்திரச் செய்கைப் படாம் போர்த்ததுவே
ஒப்பத் தோன்றிய உவவனம் தன்னைத்
தொழுதனள் காட்டிய சுதமதி தன்னொடு
மலர் கொய்யப் புகுந்தனள் மணிமேகலை என்
03-171

4. பளிக்கறை புக்ககாதை

'பரிதி அம் செல்வன் விரி கதிர்த் தானைக்கு
இருள் வளைப்புண்ட மருள் படு பூம்பொழில்
குழல் இசை தும்பி கொளுத்திக்காட்ட
மழலை வண்டு இனம் நல் யாழ்செய்ய
வெயில் நுழைபு அறியா குயில் நுழை பொதும்பர்
மயில் ஆடு அரங்கில் மந்தி காண்பன காண்!
மாசு அறத் தௌிந்த மணி நீர் இலஞ்சி
பாசடைப் பரப்பில் பல் மலர் இடை நின்று
ஒரு தனி ஓங்கிய விரை மலர்த் தாமரை
அரச அன்னம் ஆங்கு இனிது இருப்ப
04-010

கரை நின்று ஆலும் ஒரு மயில் தனக்கு
கம்புள் சேவல் கனை குரல் முழவா
கொம்பர் இருங் குயில் விளிப்பது காணாய்!
இயங்கு தேர் வீதி எழு துகள் சேர்ந்து
வயங்கு ஒளி மழுங்கிய மாதர் நின் முகம் போல்
விரை மலர்த் தாமரை கரை நின்று ஓங்கிய
கோடு உடை தாழைக் கொழு மடல் அவிழ்ந்த
வால் வெண் சுண்ணம் ஆடியது இது காண்!
மாதர் நின் கண் போது எனச் சேர்ந்து
தாது உண் வண்டு இனம் மீது கடி செங் கையின்
04-020

அம் சிறை விரிய அலர்ந்த தாமரைச்
செங் கயல் பாய்ந்து பிறழ்வன கண்டு ஆங்கு
எறிந்து அது பெறா அது இரை இழந்து வருந்தி
மறிந்து நீங்கும் மணிச் சிரல் காண்!' எனப்
பொழிலும் பொய்கையும் சுதமதி காட்ட
மணிமேகலை அம் மலர்வனம் காண்புழி
மதி மருள் வெண்குடை மன்னவன் சிறுவன்
உதயகுமரன் உரு கெழு மீது ஊர்
மீயான் நடுங்க நடுவு நின்று ஓங்கிய
கூம்பு முதல் முறிய வீங்கு பிணி அவிழ்ந்து
04-030

கயிறு கால் பரிய வயிறு பாழ்பட்டு ஆங்கு
இதை சிதைந்து ஆர்ப்ப திரை பொரு முந்நீர்
இயங்கு திசை அறியாது யாங்கணும் ஓடி
மயங்கு கால் எடுத்த வங்கம் போல
காழோர் கையற மேலோர் இன்றி
பாகின் பிளவையின் பணை முகம் துடைத்து
கோவியன் வீதியும் கொடித் தேர் வீதியும்
பீடிகைத் தெருவும் பெருங் கலக்குறுத்து ஆங்கு
இரு பால் பெயரிய ஒரு கெழு மூதூர்
ஒரு பால் படாஅது ஒரு வழித் தங்காது
04-040

பாகும் பறையும் பருந்தின் பந்தரும்
ஆதுல மாக்களும் அலவுற்று விளிப்ப
நீல மால் வரை நிலனொடு படர்ந்தெனக்
காலவேகம் களி மயக்குற்றென
விடு பரிக் குதிரையின் விரைந்து சென்று எய்தி
கடுங்கண் யானையின் கடாத் திறம் அடக்கி
அணித் தேர்த் தானையொடு அரசு இளங் குமரன்
மணித் தேர்க் கொடுஞ்சி கையான் பற்றி
கார் அலர் கடம்பன் அல்லன் என்பது
ஆரங்கண்ணியின் சாற்றினன் வருவோன்
04-050

நாடக மடந்தையர் நலம் கெழு வீதி
ஆடகச் செய்வினை மாடத்து ஆங்கண்
சாளரம் பொளித்த கால் போகு பெரு வழி
வீதி மருங்கு இயன்ற பூ அணைப் பள்ளி
தகரக் குழலாள் தன்னொடு மயங்கி
மகர யாழின் வான் கோடு தழீஇ
வட்டிகைச் செய்தியின் வரைந்த பாவையின்
எட்டிகுமரன் இருந்தோன் தன்னை
'மாதர் தன்னொடு மயங்கினை இருந்தோய்!
யாது நீ உற்ற இடுக்கண்!' என்றலும்
04-060

ஆங்கு அது கேட்டு வீங்கு இள முலையொடு
பாங்கில் சென்று தான் தொழுது ஏத்தி
மட்டு அவிழ் அலங்கல் மன்ன குமரற்கு
எட்டிகுமரன் எய்தியது உரைப்போன்
'வகை வரிச் செப்பினுள் வைகிய மலர் போல்
தகை நலம் வாடி மலர் வனம் புகூஉம்
மாதவி பயந்த மணிமேகலையொடு
கோவலன் உற்ற கொடுந் துயர் தோன்ற
நெஞ்சு இறை கொண்ட நீர்மையை நீக்கி
வெம் பகை நரம்பின் என் கைச் செலுத்தியது
04-070

இது யான் உற்ற இடும்பை' என்றலும்
மது மலர்த் தாரோன் மனம் மகிழ்வு எய்தி
'ஆங்கு அவள் தன்னை என் அணித் தேர் ஏற்றி
ஈங்கு யான் வருவேன்' என்று அவற்கு உரைத்து ஆங்கு
ஓடு மழை கிழியும் மதியம் போல
மாட வீதியில் மணித் தேர் கடைஇ
கார் அணி பூம்பொழில் கடைமுகம் குறுக அத்
தேர் ஒலி மாதர் செவிமுதல் இசைத்தலும்
"சித்திராபதியோடு உதயகுமரன் உற்று
என்மேல் வைத்த உள்ளத்தான்" என
04-080

வயந்தமாலை மாதவிக்கு ஒரு நாள்
கிளந்த மாற்றம் கேட்டேன் ஆதலின்
ஆங்கு அவன் தேர் ஒலி போலும் ஆய் இழை!
ஈங்கு என் செவிமுதல் இசைத்தது என் செய்கு?' என
அமுது உறு தீம் சொல் ஆய் இழை உரைத்தலும்
சுதமதி கேட்டுத் துளக்குறு மயில் போல்
பளிக்கறை மண்டபம் பாவையைப் 'புகுக' என்று
ஒளித்து அறை தாழ் கோத்து உள்ளகத்து இரீஇ
ஆங்கு அது தனக்கு ஓர் ஐ விலின் கிடக்கை
நீங்காது நின்ற நேர் இழை தன்னை
04-090

கல்லென் தானையொடு கடுந் தேர் நிறுத்தி
பல் மலர்ப் பூம்பொழில் பகல் முளைத்தது போல்
பூ மரச் சோலையும் புடையும் பொங்கரும்
தாமரைச் செங் கண் பரப்பினன் வரூஉம்
அரசு இளங் குமரன் 'ஆரும் இல் ஒரு சிறை
ஒரு தனி நின்றாய்! உன் திறம் அறிந்தேன்
வளர் இள வன முலை' மடந்தை மெல் இயல்
தளர் இடை அறியும் தன்மையள்கொல்லோ?
விளையா மழலை விளைந்து மெல் இயல்
முளை எயிறு அரும்பி முத்து நிரைத்தனகொல்?
04-100

செங் கயல் நெடுங் கண் செவி மருங்கு ஓடி
வெங் கணை நெடு வேள் வியப்பு உரைக்கும்கொல்?
மாதவர் உறைவிடம் ஒரீஇ மணிமேகலை
தானே தமியள் இங்கு எய்தியது உரை? எனப்
பொதி அறைப் பட்டோர் போன்று உளம் வருந்தி
மது மலர்க் கூந்தல் சுதமதி உரைக்கும்
'இளமை நாணி முதுமை எய்தி
உரை முடிவு காட்டிய உரவோன் மருகற்கு
அறிவும் சால்பும் அரசியல் வழக்கும்
செறி வளை மகளிர் செப்பலும் உண்டோ?
04-110

அனையது ஆயினும் யான் ஒன்று கிளப்பல்
வினை விளங்கு தடக் கை விறலோய்! கேட்டி
வினையின் வந்தது வினைக்கு விளைவு ஆயது
புனைவன நீங்கின் புலால் புறத்திடுவது
மூப்பு விளிவு உடையது தீப் பிணி இருக்கை
பற்றின் பற்றிடம் குற்றக் கொள்கலம்
புற்று அடங்கு அரவின் செற்றச் சேக்கை
அவலம் கவலை கையாறு அழுங்கல்
தவலா உள்ளம் தன்பால் உடையது
மக்கள் யாக்கை இது என உணர்ந்து
04-120

மிக்கோய்! இதனைப் புறமறிப்பாராய்'
என்று அவள் உரைத்த இசை படு தீம் சொல்
சென்று அவன் உள்ளம் சேராமுன்னர்
பளிங்கு புறத்து எறிந்த பவளப் பாவையின்
இளங்கொடி தோன்றுமால் இளங்கோ முன் என்
04-125

5. மணிமேகலா தெய்வம் வந்து தோன்றிய காதை

இளங்கோன் கண்ட இளம் பொன் பூங்கொடி
விளங்கு ஒளி மேனி விண்ணவர் வியப்ப
பொரு முகப் பளிங்கின் எழினி வீழ்த்து
திருவின் செய்யோள் ஆடிய பாவையின்
விரை மலர் ஐங் கணை மீன விலோதனத்து
உருவிலாளனொடு உருவம் பெயர்ப்ப
ஓவியன் உள்ளத்து உள்ளியது வியப்போன்
காவி அம் கண்ணி ஆகுதல் தௌிந்து
தாழ் ஒளி மண்டபம் தன் கையின் தடைஇச்
சூழ்வோன் சுதமதி தன் முகம் நோக்கி
05-010

'சித்திரக் கைவினை திசைதொறும் செறிந்தன!
எத் திறத்தாள் நின் இளங்கொடி? உரை' என
'குருகு பெயர்க் குன்றம் கொன்றோன்' அன்ன நின்
முருகச் செவ்வி முகந்து தன் கண்ணால்
பருகாள் ஆயின் பைந்தொடி நங்கை
ஊழ் தரு தவத்தள் சாப சரத்தி
காமற் கடந்த வாய்மையள்' என்றே
தூ மலர்க் கூந்தல் சுதமதி உரைப்ப
'சிறையும் உண்டோ செழும் புனல் மிக்குழீஇ?
நிறையும் உண்டோ காமம் காழ்க்கொளின்?
05-020

செவ்வியள் ஆயின் என்? செவ்வியள் ஆக!' என
அவ்விய நெஞ்சமொடு அகல்வோன் ஆயிடை
'அம் செஞ் சாயல்! அராந்தாணத்துள் ஓர்
விஞ்சையன் இட்ட விளங்கு இழை என்றே
கல்லென் பேர் ஊர்ப் பல்லோர் உரையினை
ஆங்கு அவர் உறைவிடம் நீங்கி ஆய் இழை!
ஈங்கு இவள் தன்னோடு எய்தியது உரை' என
'வார் கழல் வேந்தே வாழ்க நின் கண்ணி
தீ நெறிப் படரா நெஞ்சினை ஆகு மதி!
ஈங்கு இவள் தன்னோடு எய்திய காரணம்
05-030

வீங்குநீர் ஞாலம் ஆள்வோய்! கேட்டருள்!
யாப்பு உடை உள்ளத்து எம் அனை இழந்தோன்
பார்ப்பன முதுமகன் படிம உண்டியன்
மழை வளம் தரூஉம் அழல் ஓம்பாளன்
பழ வினைப் பயத்தான் பிழை மணம் எய்திய
எற்கெடுத்து இரங்கி தன் தகவு உடைமையின்
குரங்கு செய் கடல் குமரி அம் பெருந் துறைப்
பரந்து செல் மாக்களொடு தேடினன் பெயர்வோன்
கடல் மண்டு பெருந் துறைக் காவிரி ஆடிய
வட மொழியாளரொடு வருவோன் கண்டு ஈங்கு
05-040

"யாங்கனம் வந்தனை என் மகள்?" என்றே
தாங்காக் கண்ணீர் என் தலை உதிர்த்து ஆங்கு
ஓதல் அந்தணர்க்கு ஒவ்வேன் ஆயினும்
காதலன் ஆதலின் கைவிடலீயான்
இரந்து ஊண் தலைக்கொண்டு இந் நகர் மருங்கில்
பரந்து படு மனைதொறும் திரிவோன் ஒரு நாள்
புனிற்று ஆப் பாய்ந்த வயிற்றுப் புண்ணினன்
கணவிர மாலை கைக்கொண்டென்ன
நிணம் நீடு பெருங் குடர் கை அகத்து ஏந்தி
"என் மகள் இருந்த இடம்" என்று எண்ணி
05-050

தன் உறு துன்பம் தாங்காது புகுந்து
"சமணீர்காள்! நும் சரண்" என்றோனை
"இவன் நீர் அல்ல" என்று என்னொடும் வெகுண்டு
மை அறு படிவத்து மாதவர் புறத்து எமைக்
கையுதிர்க்கோடலின் கண் நிறை நீரேம்
"அறவோர் உளீரோ? ஆரும் இலோம்!" எனப்
புறவோர் வீதியில் புலம்பொடு சாற்ற
மங்குல் தோய் மாட மனைதொறும் புகூஉம்
அங்கையில் கொண்ட பாத்திரம் உடையோன்
கதிர் சுடும் அமயத்துப் பனி மதி முகத்தோன்
05-060

பொன்னின் திகழும் பொலம் பூ ஆடையன்
"என் உற்றனிரோ?" என்று எமை நோக்கி
அன்புடன் அளைஇய அருள்மொழி அதனால்
அஞ்செவி நிறைந்து நெஞ்சகம் குளிர்ப்பித்து
தன் கைப் பாத்திரம் என் கைத் தந்து ஆங்கு
எந்தைக்கு உற்ற இடும்பை நீங்க
எடுத்தனன் தழீஇ கடுப்பத் தலை ஏற்றி
மாதவர் உறைவிடம் காட்டிய மறையோன்
சா துயர் நீங்கிய தலைவன் தவ முனி
சங்கதருமன் தான் எமக்கு அருளிய
05-070

எம் கோன் இயல் குணன் ஏதம் இல் குணப் பொருள்
உலக நோன்பின் பல கதி உணர்ந்து
தனக்கு என வாழாப் பிறர்க்கு உரியாளன்
இன்பச் செவ்வி மன்பதை எய்த
அருளறம் பூண்ட ஒரு பெரும் பூட்கையின்
அறக் கதிர் ஆழி திறப்பட உருட்டி
காமற் கடந்த வாமன் பாதம்
தகைபாராட்டுதல் அல்லது யாவதும்
மிகை நா இல்லேன் வேந்தே வாழ்க!' என
'அம் சொல் ஆய் இழை! இன் திறம் அறிந்தேன்
05-080

வஞ்சி நுண் இடை மணிமேகலை தனைச்
சித்திராபதியால் சேர்தலும் உண்டு' என்று
அப் பொழில் ஆங்கு அவன் அயர்ந்து போய பின்
பளிக்கறை திறந்து பனி மதி முகத்துக்
களிக் கயல் பிறழாக் காட்சியள் ஆகி
"கற்புத் தான் இலள் நல் தவ உணர்வு இலள்
வருணக் காப்பு இலள் பொருள் விலையாட்டி" என்று
இகழ்ந்தனன் ஆகி நயந்தோன் என்னாது
புதுவோன் பின்றைப் போனது என் நெஞ்சம்
இதுவோ அன்னாய்! காமத்து இயற்கை?
05-090

'இதுவே ஆயின் கெடுக தன் திறம்!' என
மது மலர்க் குழலாள் மணிமேகலை தான்
சுதமதி தன்னொடும் நின்ற எல்லையுள்
இந்திர கோடணை விழா அணி விரும்பி
வந்து காண்குறூஉம் மணிமேகலா தெய்வம்
பதிஅகத்து உறையும் ஓர் பைந்தொடி ஆகி
மணி அறைப் பீடிகை வலம் கொண்டு ஓங்கி
'புலவன் தீர்த்தன் புண்ணியன் புராணன்
உலக நோன்பின் உயர்ந்தோய் என்கோ!
குற்றம் கெடுத்தோய் செற்றம் செறுத்தோய்
05-100

முற்ற உணர்ந்த முதல்வா என்கோ!
காமற் கடந்தோய் ஏமம் ஆயோய்
தீ நெறிக் கடும் பகை கடிந்தோய் என்கோ!
ஆயிர ஆரத்து ஆழி அம் திருந்து அடி
நா ஆயிரம் இலேன் ஏத்துவது எவன்?' என்று
எரி மணிப் பூங் கொடி இரு நில மருங்கு வந்து
ஒரு தனி திரிவது ஒத்து ஓதியின் ஒதுங்கி
நில வரை இறந்து ஓர் முடங்கு நா நீட்டும்
புல வரை இறந்த புகார் எனும் பூங்கொடி
பல் மலர் சிறந்த நல் நீர் அகழிப்
05-110

புள் ஒலி சிறந்த தெள் அரிச் சிலம்பு அடி
ஞாயில் இஞ்சி நகை மணி மேகலை
வாயில் மருங்கு இயன்ற வான் பணைத் தோளி
தருநிலை வச்சிரம் என இரு கோட்டம்
எதிர் எதிர் ஓங்கிய கதிர் இள வன முலை
ஆர் புனை வேந்தற்குப் பேர் அளவு இயற்றி
ஊழி எண்ணி நீடு நின்று ஓங்கிய
ஒரு பெருங் கோயில் திருமுகவாட்டி
குண திசை மருங்கில் நாள் முதிர் மதியமும்
குட திசை மருங்கில் சென்று வீழ் கதிரும்
05-120

வெள்ளி வெண் தோட்டொடு பொன் தோடு ஆக
எள் அறு திருமுகம் பொலியப் பெய்தலும்
அன்னச் சேவல் அயர்ந்து விளையாடிய
தன்னுறு பெடையைத் தாமரை அடக்க
பூம் பொதி சிதையக் கிழித்துப் பெடை கொண்டு
ஓங்கு இருந் தெங்கின் உயர் மடல் ஏற
அன்றில் பேடை அரிக் குரல் அழைஇ
சென்று வீழ் பொழுது சேவற்கு இசைப்ப
பவளச் செங் கால் பறவைக் கானத்து
குவளை மேய்ந்த குடக் கண் சேதா
05-130

முலை பொழி தீம் பால் எழு துகள் அவிப்ப
கன்று நினை குரல மன்று வழிப் படர
அந்தி அந்தணர் செந் தீப் பேண
பைந் தொடி மகளிர் பலர் விளக்கு எடுப்ப
யாழோர் மருதத்து இன் நரம்பு உளரக்
கோவலர் முல்லைக் குழல் மேற்கொள்ள
அமரக மருங்கில் கணவனை இழந்து
தமர் அகம் புகூஉம் ஒரு மகள் போல
கதிர் ஆற்றுப்படுத்த முதிராத் துன்பமோடு
அந்தி என்னும் பசலை மெய்யாட்டி
வந்து இறுத்தனளால் மா நகர் மருங்கு என்
05-141

6. சக்கரவாளக் கோட்டம் உரைத்த காதை

அந்தி மாலை நீங்கிய பின்னர்
வந்து தோன்றிய மலர் கதிர் மண்டிலம்
சான்றோர் தம் கண் எய்திய குற்றம்
தோன்றுவழி விளங்கும் தோற்றம் போல
மாசி அறு விசும்பின் மறு நிறம் கிளர
ஆசு அற விளங்கிய அம் தீம் தண்கதிர்
வெள்ளி வெண் குடத்துப் பால் சொரிவது போல்
கள் அவிழ் பூம் பொழில் இடைஇடைச் சொரிய
உருவு கொண்ட மின்னே போல
திருவில் இட்டுத் திகழ்தரு மேனியள்
06-010

ஆதி முதல்வன் அற ஆழி ஆள்வோன்
பாத பீடிகை பணிந்தனள் ஏத்தி
பதிஅகத்து உறையும் ஓர் பைந்தொடி ஆகி
சுதமதி நல்லாள் மதி முகம் நோக்கி
'ஈங்கு நின்றீர் என் உற்றீர்?' என
ஆங்கு அவள் ஆங்கு அவன் கூறியது உரைத்தலும்
'அரசு இளங் குமரன் ஆய் இழை தன் மேல்
தணியா நோக்கம் தவிர்ந்திலனாகி
அறத்தோர் வனம் என்று அகன்றனன் ஆயினும்
புறத்தோர் வீதியில் பொருந்துதல் ஒழியான்
06-020

பெருந் தெரு ஒழித்து இப்பெரு வனம் சூழ்ந்த
திருந்து எயில் குடபால் சிறு புழை போகி
மிக்க மாதவர் விரும்பினர் உறையும்
சக்கரவாளக் கோட்டம் புக்கால்
கங்குல் கழியினும் கடு நவை எய்தாது
அங்கு நீர் போம்' என்று அருந் தெய்வம் உரைப்ப
'வஞ்ச விஞ்சையன் மாருதவேகனும்
அம் செஞ் சாயல் நீயும் அல்லது
நெடு நகர் மருங்கின் உள்ளோர் எல்லாம்
சுடுகாட்டுக் கோட்டம் என்று அலது உரையார்
06-030

சக்கரவாளக் கோட்டம் அஃது என
மிக்கோய்! கூறிய உரைப் பொருள் அறியேன்
ஈங்கு இதன் காரணம் என்னையோ?' என
ஆங்கு அதன் காரணம் அறியக் கூறுவன்
'மாதவி மகளொடு வல் இருள் வரினும்
நீ கேள்' என்றே நேர் இழை கூறும் 'இந்
நாமப் பேர் ஊர் தன்னொடு தோன்றிய
ஈமப் புறங்காடு ஈங்கு இதன் அயலது
ஊரா நல் தேர் ஓவியப் படுத்துத்
தேவர் புகுதரூஉம் செழுங் கொடி வாயிலும்
06-040

நெல்லும் கரும்பும் நீரும் சோலையும்
நல்வழி எழுதிய நலம் கிளர் வாயிலும்
வெள்ளி வெண் சுதை இழுகிய மாடத்து
உள் உரு எழுதா வெள்ளிடை வாயிலும்
மடித்த செவ் வாய் கடுத்த நோக்கின்
தொடுத்த பாசத்துப் பிடித்த சூலத்து
நெடு நிலை மண்ணீடு நின்ற வாயிலும்
நால் பெரு வாயிலும் பாற்பட்டு ஓங்கிய
காப்பு உடை இஞ்சிக் கடி வழங்கு ஆர் இடை
உலையா உள்ளமோடு உயிர்க் கடன் இறுத்தோர்
06-050

தலை தூங்கு நெடு மரம் தாழ்ந்து புறம் சுற்றி
பீடிகை ஓங்கிய பெரும் பலி முன்றில்
காடு அமர் செல்வி கழி பெருங் கோட்டமும்
அருந் தவர்க்கு ஆயினும் அரசர்க்கு ஆயினும்
ஒருங்கு உடன் மாய்ந்த பெண்டிர்க்கு ஆயினும்
நால் வேறு வருணப் பால் வேறு காட்டி
இறந்தோர் மருங்கில் சிறந்தோர் செய்த
குறியவும் நெடியவும் குன்று கண்டன்ன
சுடுமண் ஓங்கிய நெடுநிலைக் கோட்டமும்
அருந் திறல் கடவுள் திருந்து பலிக் கந்தமும்
06-060

நிறைக் கல் தெற்றியும் மிறைக் களச் சந்தியும்
தண்டும் மண்டையும் பிடித்துக் காவலர்
உண்டு கண் படுக்கும் உறையுள் குடிகையும்
தூமக் கொடியும் சுடர்த் தோரணங்களும்
ஈமப் பந்தரும் யாங்கணும் பரந்து
சுடுவோர் இடுவோர் தொடு குழிப் படுப்போர்
தாழ் வயின் அடைப்போர் தாழியில் கவிப்போர்
இரவும் பகலும் இளிவுடன் தரியாது
வருவோர் பெயர்வோர் மாறாச் சும்மையும்
எஞ்சியோர் மருங்கின் ஈமம் சாற்றி
06-070

> நெஞ்சு நடுக்குறூஉம் நெய்தல் ஓசையும்
துறவோர் இறந்த தொழு விளிப் பூசலும்
பிறவோர் இறந்த அழு விளிப் பூசலும்
நீள் முக நரியின் தீ விளிக் கூவும்
சாவோர்ப் பயிரும் கூகையின் குரலும்
புலவு ஊண் பொருந்திய குராலின் குரலும்
ஊண் தலை துற்றிய ஆண்டலைக் குரலும்
நல் நீர்ப் புணரி நளி கடல் ஓதையின்
இன்னா இசை ஒலி என்றும் நின்று அறாது
தான்றியும் ஒடுவையும் உழிஞ்சிலும் ஓங்கி
06-080

கான்றையும் சூரையும் கள்ளியும் அடர்ந்து
காய் பசிக் கடும் பேய் கணம் கொண்டு ஈண்டும்
மால் அமர் பெருஞ்சினை வாகை மன்றமும்
வெண் நிணம் தடியொடு மாந்தி மகிழ் சிறந்து
புள் இறைகூரும் வெள்ளில் மன்றமும்
சுடலை நோன்பிகள் ஒடியா உள்ளமொடு
மடைதீ உறுக்கும் வன்னி மன்றமும்
விரத யாக்கையர் உடை தலை தொகுத்து ஆங்கு
இருந் தொடர்ப் படுக்கும் இரத்தி மன்றமும்
பிணம் தின் மாக்கள் நிணம் படு குழிசியில்
06-090

விருந்தாட்டு அயரும் வெள்ளிடை மன்றமும்
அழல் பெய் குழிசியும் புழல் பெய் மண்டையும்
வெள்ளில் பாடையும் உள்ளீட்டு அறுவையும்
பரிந்த மாலையும் உடைந்த கும்பமும்
நெல்லும் பொரியும் சில் பலி அரிசியும்
யாங்கணும் பரந்த ஓங்கு இரும் பறந்தலை
தவத் துறை மாக்கள் மிகப் பெருஞ் செல்வர்
ஈற்று இளம் பெண்டிர் ஆற்றாப் பாலகர்
முதியோர் என்னான் இளையோர் என்னான்
கொடுந்தொழிலாளன் கொன்றனன் குவிப்ப இவ்
06-100

அழல் வாய்ச் சுடலை தின்னக் கண்டும்
கழி பெருஞ் செல்வக் கள்ளாட்டு அயர்ந்து
மிக்க நல் அறம் விரும்பாது வாழும்
மக்களின் சிறந்த மடவோர் உண்டோ?
ஆங்கு அது தன்னை ஓர் அருங் கடி நகர் என
சார்ங்கலன் என்போன் தனி வழிச் சென்றோன்
என்பும் தடியும் உதிரமும் யாக்கை என்று
அன்புறு மாக்கட்கு அறியச் சாற்றி
வழுவொடு கிடந்த புழு ஊன் பிண்டத்து
அலத்தகம் ஊட்டிய அடி நரி வாய்க் கொண்டு
06-110

உலப்பு இல் இன்பமோடு உளைக்கும் ஓதையும்
கலைப் புற அல்குல் கழுகு குடைந்து உண்டு
நிலைத்தலை நெடு விளி எடுக்கும் ஓதையும்
கடகம் செறித்த கையைத் தீநாய்
உடையக் கவ்வி ஒடுங்கா ஓதையும்
சாந்தம் தோய்ந்த ஏந்து இள வன முலை
காய்ந்த பசி எருவை கவர்ந்து ஊண் ஓதையும்
பண்பு கொள் யாக்கையின் வெண்பலி அரங்கத்து
மண் கணை முழவம் ஆக ஆங்கு ஓர்
கருந் தலை வாங்கி கை அகத்து ஏந்தி
06-120

இரும் பேர் உவகையின் எழுந்து ஓர் பேய் மகள்
புயலோ குழலோ கயலோ கண்ணோ
குமிழோ மூக்கோ இதழோ கவிரோ
பல்லோ முத்தோ என்னாது இரங்காது
கண் தொட்டு உண்டு கவை அடி பெயர்த்து
தண்டாக் களிப்பின் ஆடும் கூத்துக்
கண்டனன் வெரீஇ கடு நவை எய்தி
விண்டு ஓர் திசையின் விளித்தனன் பெயர்ந்து "ஈங்கு
எம் அனை! காணாய்! ஈமச் சுடலையின்
வெம் முது பேய்க்கு என் உயிர் கொடுத்தேன்" என
06-130

தம் அனை தன் முன் வீழ்ந்து மெய் வைத்தலும்
"பார்ப்பான் தன்னொடு கண் இழந்து இருந்த இத்
தீத்தொழிலாட்டியேன் சிறுவன் தன்னை
யாரும் இல் தமியேன் என்பது நோக்காது
ஆர் உயிர் உண்டது அணங்கோ? பேயோ?
துறையும் மன்றமும் தொல் வலி மரனும்
உறையுளும் கோட்டமும் காப்பாய்! காவாய்
தகவு இலைகொல்லோ சம்பாபதி!" என
மகன் மெய் யாக்கையை மார்பு உறத் தழீஇ
ஈமப் புறங்காட்டு எயில் புற வாயிலில்
06-140

கோதமை என்பாள் கொடுந் துயர் சாற்ற
"கடி வழங்கு வாயிலில் கடுந் துயர் எய்தி
இடை இருள் யாமத்து என்னை ஈங்கு அழைத்தனை
என் உற்றனையோ? எனக்கு உரை" என்றே
பொன்னின் பொலிந்த நிறத்தாள் தோன்ற
"ஆரும்இலாட்டியேன் அறியாப் பாலகன்
ஈமப் புறங்காட்டு எய்தினோன் தன்னை
அணங்கோ பேயோ ஆர் உயிர் உண்டது
உறங்குவான் போலக் கிடந்தனன் காண்" என
"அணங்கும் பேயும் ஆர் உயிர் உண்ணா
06-150

பிணங்கு நூல் மார்பன் பேது கந்தாக
ஊழ்வினை வந்து இவன் உயிர் உண்டு கழிந்தது
மா பெருந் துன்பம் நீ ஒழிவாய்" என்றலும்
"என் உயிர் கொண்டு இவன் உயிர் தந்தருளில் என்
கண் இல் கணவனை இவன் காத்து ஓம்பிடும்
இவன் உயிர் தந்து என் உயிர் வாங்கு என்றலும்
முது மூதாட்டி இரங்கினள் மொழிவோள்
"ஐயம் உண்டோ ஆர் உயிர் போனால்
செய்வினை மருங்கின் சென்று பிறப்பு எய்துதல்?
ஆங்கு அது கொணர்ந்து நின் ஆர் இடர் நீக்குதல்
06-160

ஈங்கு எனக்கு ஆவது ஒன்று அன்று நீ இரங்கல்
'கொலை அறம் ஆம்' எனும் தொழில் மாக்கள்
அவலப் படிற்று உரை ஆங்கு அது மடவாய்
உலக மன்னவர்க்கு உயிர்க்கு உயிர் ஈவோர்
இலரோ இந்த ஈமப் புறங்காட்டு
அரசர்க்கு அமைந்தன ஆயிரம் கோட்டம்!
நிரயக் கொடு மொழி நீ ஒழிக" என்றலும்
"தேவர் தருவர் வரம் என்று ஒரு முறை
நான்மறை அந்தணர் நல் நூல் உரைக்கும்
மா பெருந் தெய்வம்! நீ அருளாவிடின்
06-170

யானோ காவேன் என் உயிர் ஈங்கு" என
"ஊழி முதல்வன் உயிர் தரின் அல்லது
ஆழித் தாழி அகவரைத் திரிவோர்
தாம் தரின் யானும் தருகுவன் மடவாய்!
ஈங்கு என் ஆற்றலும் காண்பாய்" என்றே
நால் வகை மரபின் அரூபப் பிரமரும்
நால் நால் வகையில் உரூபப் பிரமரும்
இரு வகைச் சுடரும் இரு மூவகையின்
பெரு வனப்பு எய்திய தெய்வத கணங்களும்
பல் வகை அசுரரும் படு துயர் உறூஉம்
06-180

எண் வகை நரகரும் இரு விசும்பு இயங்கும்
பல் மீன் ஈட்டமும் நாளும் கோளும்
தன் அகத்து அடக்கிய சக்கரவாளத்து
வரம் தரற்கு உரியோர் தமை முன் நிறுத்தி
"அரந்தை கெடும் இவள் அருந் துயர் இது" எனச்
சம்பாபதி தான் உரைத்த அம் முறையே
எங்கு வாழ் தேவரும் உரைப்பக் கேட்டே
கோதமை உற்ற கொடுந் துயர் நீங்கி
ஈமச் சுடலையில் மகனை இட்டு இறந்த பின்
சம்பாபதி தன் ஆற்றல் தோன்ற
06-190

எங்கு வாழ் தேவரும் கூடிய இடம் தனில்
சூழ் கடல் வளைஇய ஆழி அம் குன்றத்து
நடுவு நின்ற மேருக் குன்றமும்
புடையின் நின்ற எழு வகைக் குன்றமும்
நால் வகை மரபின் மா பெருந் தீவும்
ஓர் ஈர் ஆயிரம் சிற்றிடைத் தீவும்
பிறவும் ஆங்கு அதன் இடவகை உரியன
பெறு முறை மரபின் அறிவு வரக் காட்டி
ஆங்கு வாழ் உயிர்களும் அவ் உயிர் இடங்களும்
பாங்குற மண்ணீட்டில் பண்புற வகுத்து
06-200

மிக்க மயனால் இழைக்கப்பட்ட
சக்கரவாளக் கோட்டம் ஈங்கு இது காண்
இடு பிணக் கோட்டத்து எயில் புறம் ஆதலின்
சுடுகாட்டுக் கோட்டம் என்று அலது உரையார்
இதன் வரவு இது' என்று இருந் தெய்வம் உரைக்க
மதன் இல் நெஞ்சமொடு வான் துயர் எய்தி
பிறந்தோர் வாழ்க்கை சிறந்தோள் உரைப்ப
இறந்து இருள் கூர்ந்த இடை இருள் யாமத்துத்
தூங்கு துயில் எய்திய சுதமதி ஒழியப்
பூங்கொடி தன்னைப் பொருந்தித் தழீஇ
06-210

அந்தரம் ஆறா ஆறு ஐந்து யோசனைத்
தென் திசை மருங்கில் சென்று திரை உடுத்த
மணிபல்லவத்திடை மணிமேகலா தெய்வம்
அணி இழை தன்னை வைத்து அகன்றது தான் என்
06-214

7. துயிலெழுப்பிய காதை

மணிமேகலை தனை மணிபல்லவத்திடை
மணிமேகலா தெய்வம் வைத்து நீங்கி
மணிமேகலை தனை மலர்ப் பொழில் கண்ட
உதயகுமரன் உறு துயர் எய்தி
'கங்குல் கழியின் என் கை அகத்தாள்' என
பொங்கு மெல் அமளியில் பொருந்தாது இருந்தோன்
முன்னர்த் தோன்றி 'மன்னவன் மகனே!
கோல் நிலை திரிந்திடின் கோள் நிலை திரியும்
கோள் நிலை திரிந்திடின் மாரி வறம் கூரும்
மாரி வறம் கூரின் மன் உயிர் இல்லை
07-010

மன் உயிர் எல்லாம் மண் ஆள் வேந்தன்
தன் உயிர் என்னும் தகுதி இன்று ஆகும்
தவத் திறம் பூண்டோள் தன்மேல் வைத்த
அவத் திறம் ஒழிக' என்று அவன்வயின் உரைத்த பின்
உவவனம் புகுந்து ஆங்கு உறு துயில் கொள்ளும்
சுதமதி தன்னைத் துயிலிடை நீக்கி
'இந்திர கோடணை இந் நகர்க் காண
வந்தேன் அஞ்சல் மணிமேகலை யான்
ஆதிசால் முனிவன் அறவழிப்படூஉம்
ஏது முதிர்ந்தது இளங்கொடிக்கு ஆதலின்
07-020

விஞ்சையின் பெயர்த்து நின் விளங்கு இழை தன்னை ஓர்
வஞ்சம் இல் மணிபல்லவத்திடை வைத்தேன்
பண்டைப் பிறப்பும் பண்புற உணர்ந்து ஈங்கு
இன்று ஏழ் நாளில் இந் நகர் மருங்கே
வந்து தோன்றும் மடக்கொடி நல்லாள்
களிப்பு மாண் செல்வக் காவல் பேர் ஊர்
ஒளித்து உரு எய்தினும் உன்திறம் ஒளியாள்
ஆங்கு அவள் இந் நகர் புகுந்த அந் நாள்
ஈங்கு நிகழ்வன ஏதுப் பல உள
மாதவி தனக்கு யான் வந்த வண்ணமும்
07-030

ஏதும் இல் நெறி மகள் எய்திய வண்ணமும்
உரையாய் நீ அவள் என் திறம் உணரும்
"திரை இரும் பௌவத்துத் தெய்வம் ஒன்று உண்டு" என
கோவலன் கூறி இக் கொடி இடை தன்னை என்
நாமம் செய்த நல் நாள் நள் இருள்
"காமன் கையறக் கடு நவை அறுக்கும்
மா பெருந் தவக்கொடி ஈன்றனை" என்றே
நனவே போலக் கனவு அகத்து உரைத்தேன்
ஈங்கு இவ் வண்ணம் ஆங்கு அவட்கு உரை' என்று
அந்தரத்து எழுந்து ஆங்கு அருந் தெய்வம் போய பின்
07-040

வெந் துயர் எய்தி சுதமதி எழுந்து ஆங்கு
அகல் மனை அரங்கத்து ஆசிரியர் தம்மொடு
வகை தெரி மாக்கட்கு வட்டணை காட்டி
ஆடல் புணர்க்கும் அரங்கு இயல் மகளிரின்
கூடிய குயிலுவக் கருவி கண் துயின்று
பண்ணுக் கிளை பயிரும் பண் யாழ்த் தீம் தொடை
கொளை வல் ஆயமோடு இசை கூட்டுண்டு
வளை சேர் செங் கை மெல் விரல் உதைத்த
வெம்மை வெய்து உறாது தன்மையில் திரியவும்
பண்பு இல் காதலன் பரத்தமை நோனாது
07-050

உண் கண் சிவந்து ஆங்கு ஒல்கு கொடி போன்று
தெருட்டவும் தெருளாது ஊடலோடு துயில்வோர்
விரைப் பூம் பள்ளி வீழ் துணை தழுவவும்
தளர் நடை ஆயமொடு தங்காது ஓடி
விளையாடு சிறு தேர் ஈர்த்து மெய் வருந்தி
அமளித் துஞ்சும் ஐம்படைத் தாலி
குதலைச் செவ் வாய் குறு நடைப் புதல்வர்க்குக்
காவல் பெண்டிர் கடிப்பகை எறிந்து
தூபம் காட்டி தூங்கு துயில் வதியவும்
இறை உறை புறவும் நிறை நீர்ப் புள்ளும்
07-060

கா உறை பறவையும் நா உள் அழுந்தி
விழவுக் களி அடங்கி முழவுக் கண் துயின்று
பழ விறல் மூதூர் பாயல் கொள் நடு நாள்
கோமகன் கோயில் குறு நீர்க் கன்னலின்
யாமம் கொள்பவர் ஏத்து ஒலி அரவமும்
உறையுள் நின்று ஒடுங்கிய உண்ணா உயக்கத்து
நிறை அழி யானை நெடுங் கூ விளியும்
தேர் வழங்கு தெருவும் சிற்றிடை முடுக்கரும்
ஊர் காப்பாளர் எறி துடி ஓதையும்
முழங்கு நீர் முன் துறைக் கலம் புணர் கம்மியர்
07-070

துழந்து அடு கள்ளின் தோப்பி உண்டு அயர்ந்து
பழஞ் செருக்கு உற்ற அனந்தர்ப் பாணியும்
அர வாய்க் கடிப்பகை ஐயவிக் கடிப்பகை
விரவிய மகளிர் ஏந்திய தூமத்து
புதல்வரைப் பயந்த புனிறு தீர் கயக்கம்
தீர் வினை மகளிர் குளன் ஆடு அரவமும்
வலித்த நெஞ்சின் ஆடவர் இன்றியும்
புலிக் கணத்து அன்னோர் பூத சதுக்கத்து
'கொடித் தேர் வேந்தன் கொற்றம் கொள்க' என
இடிக் குரல் முழக்கத்து இடும் பலி ஓதையும்
07-080

ஈற்று இளம் பெண்டிர் ஆற்றாப் பாலகர்
கடுஞ் சூல் மகளிர் நெடும் புண் உற்றோர்
தம் துயர் கெடுக்கும் மந்திர மாக்கள்
'மன்றப் பேய்மகள் வந்து கைக்கொள்க' என
நின்று எறி பலியின் நெடுங் குரல் ஓதையும்
பல் வேறு ஓதையும் பரந்து ஒருங்கு இசைப்ப
கேட்டு உளம் கலங்கி ஊட்டு இருள் அழுவத்து
முருந்து ஏர் இள நகை நீங்கிப் பூம்பொழில்
திருந்து எயில் குடபால் சிறு புழை போகி
மிக்க மா தெய்வம் வியந்து எடுத்து உரைத்த
07-090

சக்கரவாளக் கோட்டத்து ஆங்கண்
பலர் புகத் திறந்த பகு வாய் வாயில்
உலக அறவியின் ஒரு புடை இருத்தலும்
கந்து உடை நெடு நிலைக் காரணம் காட்டிய
அந்தில் எழுதிய அற்புதப் பாவை
மைத் தடங் கண்ணாள் மயங்கினள் வெருவ
திப்பியம் உரைக்கும் தெய்வக் கிளவியின்
'இரவிவன்மன் ஒரு பெரு மகளே!
துரகத் தானைத் துச்சயன் தேவி!
தயங்கு இணர்க் கோதை தாரை சாவுற
07-100

மயங்கி யானை முன் மன் உயிர் நீத்தோய்!
காராளர் சண்பையில் கௌசிகன் மகளே!
மாருதவேகனோடு இந் நகர் புகுந்து
தாரை தவ்வை தன்னொடு கூடிய
வீரை ஆகிய சுதமதி கேளாய்!
இன்று ஏழ் நாளில் இடை இருள் யாமத்து
தன் பிறப்பு அதனொடு நின் பிறப்பு உணர்ந்து ஈங்கு
இலக்குமி ஆகிய நினக்கு இளையாள் வரும்
அஞ்சல்' என்று உரைத்தது அவ் உரை கேட்டு
நெஞ்சம் நடுக்குறூஉம் நேர் இழை நல்லாள்
07-110

காவலாளர் கண் துயில்கொள்ளத்
தூ மென் சேக்கைத் துயில் கண் விழிப்ப
வலம்புரிச் சங்கம் வறிது எழுந்து ஆர்ப்பப்
புலம் புரிச் சங்கம் பொருளொடு முழங்கப்
புகர் முக வாரணம் நெடுங் கூ விளிப்ப
பொறி மயிர் வாரணம் குறுங் கூ விளிப்ப
பணை நிலைப் புரவி பல எழுந்து ஆலப்
பணை நிலைப் புள்ளும் பல எழுந்து ஆலப்
பூம்பொழில் ஆர்கைப் புள் ஒலி சிறப்பப்
பூங்கொடியார் கைப் புள் ஒலி சிறப்பக்
07-120

கடவுள் பீடிகைப் பூப் பலி கடைகொளக்
கலம் பகர் பீடிகைப் பூப் பலி கடை கொளக்
குயிலுவர் கடைதொறும் பண் இயம் பரந்து எழக்
கொடுப்போர் கடைதொறும் பண்ணியம் பரந்து எழ
ஊர் துயில் எடுப்ப உரவுநீர் அழுவத்துக்
கார் இருள் சீத்து கதிரவன் முளைத்தலும்
ஏ உறு மஞ்ஞையின் இனைந்து அடி வருந்த
மா நகர் வீதி மருங்கில் போகி
போய கங்குலில் புகுந்ததை எல்லாம்
மாதவி தனக்கு வழு இன்று உரைத்தலும்
07-130

நல் மணி இழந்த நாகம் போன்று அவள்
தன் மகள் வாராத் தனித் துயர் உழப்ப
இன் உயிர் இழந்த யாக்கையின் இருந்தனள்
துன்னியது உரைத்த சுதமதி தான் என்
07-134

8. மணிபல்லவத்துத் துயருற்ற காதை

ஈங்கு இவள் இன்னணம் ஆக இருங் கடல்
வாங்கு திரை உடுத்த மணிபல்லவத்திடை
தத்து நீர் அடைகரை சங்கு உழு தொடுப்பின்
முத்து விளை கழனி முரி செம் பவளமொடு
விரை மரம் உருட்டும் திரை உலாப் பரப்பின்
ஞாழல் ஓங்கிய தாழ் கண் அசும்பின்
ஆம்பலும் குவளையும் தாம் புணர்ந்து மயங்கி
வண்டு உண மலர்ந்த குண்டு நீர் இலஞ்சி
முடக் கால் புன்னையும் மடல் பூந் தாழையும்
வெயில் வரவு ஒழித்த பயில் பூம் பந்தர்
08-010

அறல் விளங்கு நிலா மணல் நறு மலர்ப் பள்ளித்
துஞ்சு துயில் எழூஉம் அம் சில் ஓதி
காதல் சுற்றம் மறந்து கடைகொள
வேறு இடத்துப் பிறந்த உயிரே போன்று
பண்டு அறி கிளையொடு பதியும் காணாள்
கண்டு அறியாதன கண்ணில் காணா
நீல மாக் கடல் நெட்டிடை அன்றியும்
காலை ஞாயிறு கதிர் விரித்து முளைப்ப
'உவவன மருங்கினில் ஓர் இடம்கொல் இது!
சுதமதி ஒளித்தாய்! துயரம் செய்தனை!
08-020

நனவோ கனவோ என்பதை அறியேன்!
மனம் நடுக்குறூஉம் மாற்றம் தாராய்!
வல் இருள் கழிந்தது மாதவி மயங்கும்
மெல் வளை! வாராய் விட்டு அகன்றனையோ?
விஞ்சையின் தோன்றிய விளங்கு இழை மடவாள்
வஞ்சம் செய்தனள்கொல்லோ? அறியேன்!
ஒரு தனி அஞ்சுவென் திருவே வா!' எனத்
திரை தவழ் பறவையும் விரி சிறைப் பறவையும்
எழுந்து வீழ் சில்லையும் ஒடுங்கு சிறை முழுவலும்
அன்னச் சேவல் அரசன் ஆக
08-030

பல் நிறப் புள் இனம் பரந்து ஒருங்கு ஈண்டி
பாசறை மன்னர் பாடி போல
வீசு நீர்ப் பரப்பின் எதிர் எதிர் இருக்கும்
துறையும் துறை சூழ் நெடு மணல் குன்றமும்
யாங்கணும் திரிவோள் பாங்கு இனம் காணாள்
குரல் தலைக் கூந்தல் குலைந்து பின் வீழ
அரற்றினள் கூஉய் அழுதனள் ஏங்கி
வீழ் துயர் எய்திய விழுமக் கிளவியின்
தாழ் துயர் உறுவோள் தந்தையை உள்ளி
'எம் இதில் படுத்தும் வெவ் வினை உருப்ப
08-040

கோல் தொடி மாதரொடு வேற்று நாடு அடைந்து
வை வாள் உழந்த மணிப் பூண் அகலத்து
ஐயாவோ!' என்று அழுவோள் முன்னர்
விரிந்து இலங்கு அவிர் ஒளி சிறந்து கதிர் பரப்பி
உரை பெறு மும் முழம் நிலமிசை ஓங்கித்
திசைதொறும் ஒன்பான் முழ நிலம் அகன்று
விதி மாண் நாடியின் வட்டம் குயின்று
பதும சதுரம் மீமிசை விளங்கி
'அறவோற்கு அமைந்த ஆசனம்' என்றே
நறு மலர் அல்லது பிற மரம் சொரியாது
08-050

பறவையும் முதிர் சிறை பாங்கு சென்று அதிராது
தேவர் கோன் இட்ட மா மணிப் பீடிகை
பிறப்பு விளங்கு அவிர் ஒளி அறத்தகை ஆசனம்
கீழ் நில மருங்கின் நாக நாடு ஆளும்
இருவர் மன்னவர் ஒரு வழித் தோன்றி
'எமது ஈது' என்றே எடுக்கல் ஆற்றார்
தம பெரும் பற்று நீங்கலும் நீங்கார்
செங் கண் சிவந்து நெஞ்சு புகையுயிர்த்துத்
தம் பெருஞ் சேனையொடு வெஞ் சமம் புரி நாள்
'இருஞ் செரு ஒழிமின் எமது ஈது' என்றே
08-060

பெருந் தவ முனிவன் இருந்து அறம் உரைக்கும்
பொரு அறு சிறப்பின் புரையோர் ஏத்தும்
தரும பீடிகை தோன்றியது ஆங்கு என்
08-063

9. பீடிகை கண்டு பிறப்புணர்ந்த காதை

ஆங்கு அது கண்ட ஆய் இழை அறியாள்
காந்தள் அம் செங் கை தலை மேல் குவிந்தன
தலைமேல் குவிந்த கையள் செங் கண்
முலை மேல் கலுழ்ந்து முத்தத் திரள் உகுத்து அதின்
இடமுறை மும் முறை வலமுறை வாரா
கொடி மின் முகிலொடு நிலம் சேர்ந்தென்ன
இறு நுசுப்பு அலச வெறு நிலம் சேர்ந்து ஆங்கு
எழுவோள் பிறப்பு வழு இன்று உணர்ந்து
'தொழு தகை மாதவ! துணி பொருள் உணர்ந்தோய்!
காயங்கரையில் நீ உரைத்ததை எல்லாம்
09-010

வாயே ஆகுதல் மயக்கு அற உணர்ந்தேன்
காந்தாரம் என்னும் கழி பெரு நாட்டுப்
பூருவ தேயம் பொறை கெட வாழும்
அத்திபதி எனும் அரசு ஆள் வேந்தன்
மைத்துனன் ஆகிய பிரமதருமன்!
ஆங்கு அவன் தன்பால் அணைந்து அறன் உரைப்போய்
"தீம் கனி நாவல் ஓங்கும் இத் தீவிடை
இன்று ஏழ் நாளில் இரு நில மாக்கள்
நின்று நடுக்கு எய்த நீள் நில வேந்தே!
பூமி நடுக்குறூஉம் போழ்தத்து இந் நகர்
09-020

நாக நல் நாட்டு நானூறு யோசனை
வியன் பாதலத்து வீழ்ந்து கேடு எய்தும்
இதன்பால் ஒழிக" என இரு நில வேந்தனும்
மா பெரும் பேர் ஊர் மக்கட்கு எல்லாம்
"ஆவும் மாவும் கொண்டு கழிக" என்றே
பறையின் சாற்றி நிறை அருந் தானையோடு
இடவயம் என்னும் இரும் பதி நீங்கி
வட வயின் அவந்தி மா நகர்ச் செல்வோன்
காயங்கரை எனும் பேர் யாற்று அடைகரை
சேய் உயர் பூம்பொழில் பாடி யெய்து இருப்ப
09-030

எம் கோன் நீ ஆங்கு உரைத்த அந் நாளிடைத்
தங்காது அந் நகர் வீழ்ந்து கேடு எய்தலும்
மருள் அறு புலவ! நின் மலர் அடி அதனை
அரசொடு மக்கள் எல்லாம் ஈண்டிச்
சூழ்ந்தனர் வணங்கித் தாழ்ந்து பல ஏத்திய
அருளறம் பூண்ட ஒரு பேர் இன்பத்து
உலகு துயர் கெடுப்ப அருளிய அந் நாள்
அரவக் கடல் ஒலி அசோதரம் ஆளும்
இரவிவன்மன் ஒரு பெருந்தேவி
அலத்தகச் சீறடி அமுதபதி வயிற்று
09-040

இலக்குமி என்னும் பெயர் பெற்றுப் பிறந்தேன்
அத்திபதி எனும் அரசன் பெருந்தேவி
சித்திபுரம் ஆளும் சீதரன் திருமகள்
நீலபதி எனும் நேர் இழை வயிற்றில்
காலை ஞாயிற்றுக் கதிர் போல் தோன்றிய
இராகுலன் தனக்குப் புக்கேன் அவனொடு
பராவரும் மரபின் நின் பாதம் பணிதலும்
"எட்டு இரு நாளில் இவ் இராகுலன் தன்னைத்
திட்டிவிடம் உணும் செல் உயிர் போனால்
தீ அழல் அவனொடு சேயிழை மூழ்குவை
09-050

ஏது நிகழ்ச்சி ஈங்கு இன்று ஆதலின்
கவேர கன்னிப் பெயரொடு விளங்கிய
தவாக் களி மூதூர்ச் சென்று பிறப்பு எய்துதி
அணி இழை! நினக்கு ஓர் அருந் துயர் வரு நாள்
மணிமேகலா தெய்வம் வந்து தோன்றி
அன்று அப் பதியில் ஆர் இருள் எடுத்து
தென் திசை மருங்கில் ஓர் தீவிடை வைத்தலும்
வேக வெந் திறல் நாக நாட்டு அரசர்
சின மாசு ஒழித்து மன மாசு தீர்த்து ஆங்கு
அறச் செவி திறந்து மறச் செவி அடைத்து
09-060

பிறவிப் பிணி மருத்துவன் இருந்து அறம் உரைக்கும்
திருந்து ஒளி ஆசனம் சென்று கைதொழுதி
அன்றைப் பகலே உன் பிறப்பு உணர்ந்து ஈங்கு
இன்று யான் உரைத்த உரை தௌிவாய்" என,
சா துயர் கேட்டுத் தளர்ந்து உகு மனத்தேன்
"காதலன் பிறப்புக் காட்டாயோ?" என
"ஆங்கு உனைக் கொணர்ந்த அரும் பெருந் தெய்வம்
பாங்கில் தோன்றி 'பைந்தொடி! கணவனை
ஈங்கு இவன்' என்னும்" என்று எடுத்து ஓதினை
ஆங்கு அத் தெய்வதம் வாராதோ?" என
ஏங்கினள் அழூஉம் இளங்கொடி தான் என்
09-071

10. மந்திரம் கொடுத்த காதை

'அறவோன் ஆசனத்து ஆய் இழை அறிந்த
பிறவியள் ஆயினள் பெற்றியும் ஐது' என
விரை மலர் ஏந்தி விசும்பூடு இழிந்து
பொரு அறு பூங் கொடி பூமியில் பொலிந்தென
வந்து தோன்றிய மணிமேகலா தெய்வம்
முந்தைப் பிறப்பு எய்தி நின்றோள் கேட்ப
'உயிர்கள் எல்லாம் உணர்வு பாழாகி
பொருள் வழங்கு செவித் துளை தூர்ந்து அறிவு இழந்த
வறம் தலை உலகத்து அறம் பாடு சிறக்கச்
சுடர் வழக்கு அற்றுத் தடுமாறுகாலை ஓர்
10-010

இள வள ஞாயிறு தோன்றியதென்ன
நீயோ தோன்றினை நின் அடி பணிந்தேன்
நீயே ஆகி நிற்கு அமைந்த இவ் ஆசனம்
நாமிசை வைத்தேன் தலைமிசைக் கொண்டேன்
பூமிசை ஏற்றினேன் புலம்பு அறுக" என்றே
வலம் கொண்டு ஆசனம் வணங்குவோள் முன்னர்ப்
பொலம் கொடி நிலமிசைச் சேர்ந்தெனப் பொருந்தி
'உன் திருவருளால் என் பிறப்பு உணர்ந்தேன்
என் பெருங் கணவன் யாங்கு உளன்?' என்றலும்
'இலக்குமி கேளாய் இராகுலன் தன்னொடு
10-020

புலத்தகை எய்தினை பூம்பொழில் அகவயின்
இடங்கழி காமமொடு அடங்கானாய் அவன்
மடந்தை மெல் இயல் மலர் அடி வணங்குழி
சாதுசக்கரன் மீவிசும்பு திரிவோன்
தெரு மரல் ஒழித்து ஆங்கு இரத்தினத் தீவத்துத்
தரும சக்கரம் உருட்டினன் வருவோன்
வெங்கதிர் அமயத்து வியன் பொழில் அகவயின்
வந்து தோன்றலும் மயங்கினை கலங்கி
மெல் இயல்! கண்டனை மெய்ந் நடுக்குற்றனை
நல்கூர் நுசுப்பினை நாணினை இறைஞ்ச
10-030

இராகுலன் "வந்தோன் யார்?" என வெகுளலும்
விரா மலர்க் கூந்தல்! அவன் வாய் புதையா
"வானூடு இழிந்தோன் மலர் அடி வணங்காது
நா நல்கூர்ந்தனை" என்று அவன் தன்னொடு
பகை அறு பாத்தியன் பாதம் பணிந்து ஆங்கு
"அமர! கேள் நின் தமர் அலம் ஆயினும்
அம் தீம் தண்ணீர் அமுதொடு கொணர்கேம்
உண்டி யாம் உன் குறிப்பினம்" என்றலும்
"எம் அனை! உண்கேன் ஈங்குக் கொணர்க" என
அந் நாள் அவன் உண்டருளிய அவ் அறம் 1
10-040

நின்னாங்கு ஒழியாது நின் பிறப்பு அறுத்திடும்
உவவன மருங்கில் உன்பால் தோன்றிய
உதயகுமரன் அவன் உன் இராகுலன்
ஆங்கு அவன் அன்றியும் அவன்பால் உள்ளம்
நீங்காத் தன்மை நினக்கும் உண்டு ஆகலின்
கந்தசாலியின் கழி பெரு வித்து ஓர்
வெந்து உகு வெங் களர் வீழ்வது போன்ம் என
அறத்தின் வித்து ஆங்கு ஆகிய உன்னை ஓர்
திறப்படற்கு ஏதுவா சேயிழை! செய்தேன்
இன்னும் கேளாய் இலக்குமி! நீ நின்
10-050

தவ்வையர் ஆவோர் தாரையும் வீரையும்
ஆங்கு அவர் தம்மை அங்க நாட்டு அகவயின்
கச்சயம் ஆளும் கழல் கால் வேந்தன்
துச்சயன் என்போன் ஒருவன் கொண்டனன்
அவருடன் ஆங்கு அவன் அகல் மலை ஆடி
கங்கைப் பேர் யாற்று அடைகரை இருந்துழி
மற வணம் நீத்த மாசு அறு கேள்வி
அறவணன் ஆங்கு அவன்பால் சென்றோனை
"ஈங்கு வந்தீர் யார்?" என்று எழுந்து அவன்
பாங்கு உளி மாதவன் பாதம் பணிதலும்
10-060

"ஆதி முதல்வன் அற ஆழி ஆள்வோன்
மா துயர் எவ்வம் மக்களை நீக்கி
விலங்கும் தம்முள் வெரூஉம் பகை நீக்கி
உடங்கு உயிர் வாழ்க என்று உள்ளம் கசிந்து உக
தொன்று காலத்து நின்று அறம் உரைத்த
குன்ற மருங்கில் குற்றம் கெடுக்கும்
பாத பங்கயம் கிடத்தலின் ஈங்கு இது
பாதபங்கய மலை எனும் பெயர்த்து ஆயது
தொழுது வலம் கொள்ள வந்தேன் ஈங்கு இப்
பழுது இல் காட்சியீர்! நீயிரும் தொழும்" என
10-070

அன்று அவன் உரைத்த அவ் உரை பிழையாது
சென்று கைதொழுது சிறப்புச் செய்தலின்
மாதவி ஆகியும் சுதமதி ஆகியும்
கோதை அம் சாயல்! நின்னொடு கூடினர்
அறிபிறப்பு உற்றனை அறம் பாடு அறிந்தனை
பிற அறம் உரைப்போர் பெற்றியும் கேட்குவை
பல் வேறு சமயப் படிற்று உரை எல்லாம்
அல்லி அம் கோதை! கேட்குறும் அந் நாள்
இளையள் வளையோள் என்று உனக்கு யாவரும்
விளை பொருள் உரையார் வேற்று உரு எய்தவும்
10-080

அந்தரம் திரியவும் ஆக்கும் இவ் அருந் திறல்
மந்திரம் கொள்க' என வாய்மையின் ஓதி
'மதி நாள் முற்றிய மங்கலத் திருநாள்
பொது அறிவு இகழ்ந்து புலம் உறு மாதவன்
திருவறம் எய்துதல் சித்தம் என்று உணர் நீ
மன் பெரும் பீடிகை வணங்கினை ஏத்தி
நின் 'பதிப் புகுவாய்' என்று எழுந்து ஓங்கி
'மறந்ததும் உண்டு' என மறித்து ஆங்கு இழிந்து
'சிறந்த கொள்கைச் சேயிழை! கேளாய்
மக்கள் யாக்கை உணவின் பிண்டம்
10-090

இப் பெரு மந்திரம் இரும் பசி அறுக்கும்' என்று
ஆங்கு அது கொடுத்து ஆங்கு அந்தரம் எழுந்து
நீங்கியது ஆங்கு நெடுந் தெய்வம் தான் என்
10-093

11. பாத்திரம் பெற்ற காதை

மணிமேகலா தெய்வம் நீங்கிய பின்னர்
மணிபல்லவத்திடை மணிமேகலை தான்
வெண் மணல் குன்றமும் விரி பூஞ்சோலையும்
தண் மலர்ப்பொய்கையும் தாழ்ந்தனள் நோக்கிக்
காவதம் திரிய கடவுள் கோலத்துத்
தீவதிலகை செவ்வனம் தோன்றிக்
'கலம் கவிழ் மகளிரின் வந்து ஈங்கு எய்திய
இலங்கு தொடி நல்லாய்! யார் நீ?' என்றலும்
'எப் பிறப்பு அகத்துள் "யார் நீ" என்றது
பொன் கொடி அன்னாய்! பொருந்திக் கேளாய்!
11-010

போய பிறவியில் பூமி அம் கிழவன்
இராகுலன் மனை யான் இலக்குமி என் பேர்
ஆய பிறவியில் ஆடல் அம் கணிகை
மாதவி ஈன்ற மணிமேகலை யான்
என் பெயர்த் தெய்வம் ஈங்கு எனைக் கொணர இம்
மன் பெரும் பீடிகை என் பிறப்பு உணர்ந்தேன்
ஈங்கு என் வரவு இது ஈங்கு எய்திய பயன் இது
பூங் கொடி அன்னாய் யார் நீ?' என்றலும்
ஆய் இழை தன் பிறப்பு அறிந்தமை அறிந்த
தீவதிலகை செவ்வனம் உரைக்கும்
11-020

'ஈங்கு இதன் அயல் அகத்து இரத்தினத் தீவத்து
ஓங்கு உயர் சமந்தத்து உச்சி மீமிசை
அறவியங் கிழவோன் அடி இணை ஆகிய
பிறவி என்னும் பெருங் கடல் விடூஉம்
அறவி நாவாய் ஆங்கு உளது ஆதலின்
தொழுது வலம் கொண்டு வந்தேன் ஈங்கு
பழுது இல் காட்சி இந் நல் மணிப் பீடிகை
தேவர் கோன் ஏவலின் காவல் பூண்டேன்
தீவதிலகை என் பெயர் இது கேள்
தரும தலைவன் தலைமையின் உரைத்த
11-030

பெருமைசால் நல் அறம் பிறழா நோன்பினர்
கண்டு கைதொழுவோர் கண்டதன் பின்னர்
பண்டைப் பிறவியர் ஆகுவர் பைந்தொடி
அரியர் உலகத்து ஆங்கு அவர்க்கு அறமொழி
உரியது உலகத்து ஒருதலையாக
ஆங்கனம் ஆகிய அணி இழை! இது கேள்
ஈங்கு இப் பெரும் பெயர்ப் பீடிகை முன்னது
மா மலர்க் குவளையும் நெய்தலும் மயங்கிய
கோமுகி என்னும் கொழு நீர் இலஞ்சி
இருது இளவேனிலில் எரி கதிர் இடபத்து
11-040

ஒருபதின் மேலும் ஒருமூன்று சென்ற பின்
மீனத்து இடைநிலை மீனத்து அகவையின்
போதித் தலைவனொடு பொருந்தித் தோன்றும்
ஆபுத்திரன் கை அமுதசுரபி எனும்
மா பெரும் பாத்திரம் மடக்கொடி! கேளாய்
அந் நாள் இந் நாள் அப் பொழுது இப் பொழுது
நின்னாங்கு வருவது போலும் நேர் இழை!
ஆங்கு அதில் பெய்த ஆருயிர்மருந்து
வாங்குநர் கைஅகம் வருத்துதல் அல்லது
தான் தொலைவு இல்லாத் தகைமையது ஆகும்
11-050

நறு மலர்க் கோதை! நின் ஊர் ஆங்கண்
அறவணன் தன்பால் கேட்குவை இதன் திறம்'
என்று அவள் உரைத்தலும் இளங்கொடி விரும்பி
மன் பெரும் பீடிகை தொழுதனள் வணங்கி
தீவதிலகை தன்னொடும் கூடி
கோமுகி வலம் செய்து கொள்கையின் நிற்றலும்
எழுந்து வலம் புரிந்த இளங்கொடி செங் கையில்
தொழும்தகை மரபின் பாத்திரம் புகுதலும்
பாத்திரம் பெற்ற பைந் தொடி மடவாள்
மாத்திரை இன்றி மனம் மகிழ்வு எய்தி
11-060

'மாரனை வெல்லும் வீர! நின் அடி
தீ நெறிக் கடும் பகை கடிந்தோய்! நின் அடி
பிறர்க்கு அறம் முயலும் பெரியோய்! நின் அடி
துறக்கம் வேண்டாத் தொல்லோய்! நின் அடி
எண் பிறக்கு ஒழிய இறந்தோய்! நின் அடி
கண் பிறர்க்கு அளிக்கும் கண்ணோய்! நின் அடி
தீ மொழிக்கு அடைத்த செவியோய்! நின் அடி
வாய்மொழி சிறந்த நாவோய்! நின் அடி
நரகர் துயர் கெட நடப்போய்! நின் அடி
உரகர் துயரம் ஒழிப்போய்! நின் அடி
11-070

வணங்குதல் அல்லது வாழ்த்தல் என் நாவிற்கு
அடங்காது!" என்ற ஆய் இழை முன்னர்
போதி நீழல் பொருந்தித் தோன்றும்
நாதன் பாதம் நவை கெட ஏத்தித்
தீவதிலகை சேயிழைக்கு உரைக்கும்
'குடிப் பிறப்பு அழிக்கும் விழுப்பம் கொல்லும்
பிடித்த கல்விப் பெரும் புணை விடூஉம்
நாண் அணி களையும் மாண் எழில் சிதைக்கும்
பூண் முலை மாதரொடு புறங்கடை நிறுத்தும்
பசிப் பிணி என்னும் பாவி அது தீர்த்தோர்
11-080

இசைச் சொல் அளவைக்கு என் நா நிமிராது
புல் மரம் புகையப் புகை அழல் பொங்கி
மன் உயிர் மடிய மழைவளம் கரத்தலின்
அரசு தலைநீங்கிய அரு மறை அந்தணன்
இரு நில மருங்கின் யாங்கணும் திரிவோன்
அரும் பசி களைய ஆற்றுவது காணான்
திருந்தா நாய் ஊன் தின்னுதல் உறுவோன்
இந்திர சிறப்புச் செய்வோன் முன்னர்
வந்து தோன்றிய வானவர் பெருந்தகை
மழை வளம் தருதலின் மன் உயிர் ஓங்கி
11-090

பிழையா விளையுளும் பெருகியது அன்றோ?
ஆற்றுநர்க்கு அளிப்போர் அறம் விலைபகர்வோர்
ஆற்றா மாக்கள் அரும் பசி களைவோர்
மேற்றே உலகின் மெய்ந்நெறி வாழ்க்கை
மண் திணி ஞாலத்து வாழ்வோர்க்கு எல்லாம்
உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே
உயிர்க் கொடை பூண்ட உரவோய் ஆகி
கயக்கு அறு நல் அறம் கண்டனை என்றலும்
விட்ட பிறப்பில் யான் விரும்பிய காதலன்
திட்டிவிடம் உணச் செல் உயிர் போவுழி
11-100

உயிரொடு வேவேன் உணர்வு ஒழி காலத்து
வெயில் விளங்கு அமயத்து விளங்கித் தோன்றிய
சாதுசக்கரன் தனை யான் ஊட்டிய
காலம் போல்வதோர் கனா மயக்கு உற்றேன்
ஆங்கு அதன் பயனே ஆர் உயிர் மருந்து ஆய்
ஈங்கு இப் பாத்திரம் என் கைப் புகுந்தது
நாவலொடு பெயரிய மா பெருந் தீவத்து
வித்தி நல் அறம் விளைந்த அதன் பயன்
துய்ப்போர் தம் மனை துணிச் சிதர் உடுத்து
வயிறு காய் பெரும் பசி அலைத்தற்கு இரங்கி
11-110

வெயில் என முனியாது புயல் என மடியாது
புறங்கடை நின்று புன்கண் கூர்ந்து முன்
அறங்கடை நில்லாது அயர்வோர் பலரால்
ஈன்ற குழவி முகம் கண்டு இரங்கி
தீம் பால் சுரப்போள் தன் முலை போன்றே
நெஞ்சு வழிப்படூஉம் விஞ்சைப் பாத்திரத்து
அகன் சுரைப் பெய்த ஆருயிர்மருந்து அவர்
முகம் கண்டு சுரத்தல் காண்டல் வேட்கையேன்' என
மறந்தேன் அதன் திறம் நீ எடுத்து உரைத்தனை
அறம் கரியாக அருள் சுரந்து ஊட்டும்
11-120

சிறந்தோர்க்கு அல்லது செவ்வனம் சுரவாது
ஆங்கனம் ஆயினை அதன் பயன் அறிந்தனை
ஈங்கு நின்று எழுவாய்' என்று அவள் உரைப்பத்
தீவதிலகை தன் அடி வணங்கி
மா பெரும் பாத்திரம் மலர்க் கையின் ஏந்திக்
கோமகன் பீடிகை தொழுது வலம் கொண்டு
வானூடு எழுந்து மணிமேகலை தான்
'வழு அறு தெய்வம் வாய்மையின் உரைத்த
எழு நாள் வந்தது என் மகள் வாராள்!
வழுவாய் உண்டு!' என மயங்குவோள் முன்னர்
11-130

வந்து தோன்றி அவர் மயக்கம் களைந்து
அந்தில் அவர்க்கு ஓர் அற்புதம் கூறும்
'இரவிவன்மன் ஒரு பெரு மகளே!
துரகத் தானைத் துச்சயன் தேவி!
அமுதபதி வயிற்று அரிதின் தோன்றி
தவ்வையர் ஆகிய தாரையும் வீரையும்
அவ்வையர் ஆயினீர் நும் அடி தொழுதேன்
வாய்வதாக மானிட யாக்கையில்
தீவினை அறுக்கும் செய் தவம் நுமக்கு ஈங்கு
அறவண அடிகள் தம்பால் பெறுமின்
11-140

செறி தொடி நல்லீர்! உம் பிறப்பு ஈங்கு இஃது
ஆபுத்திரன் கை அமுதசுரபி எனும்
மா பெரும் பாத்திரம் நீயிரும் தொழும்!' என
தொழுதனர் ஏத்திய தூமொழியாரொடும்
'பழுது அறு மாதவன் பாதம் படர்கேம்
எழுக' என எழுந்தனள் இளங்கொடி தான் என்
11-146